தைப்பூச திருவிழா - பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
பழனி: பார்புகழும் பழனியில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காணும் திசையெங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று திருக்கல்யாணமும் நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
தைப்பூச கொடியேற்றம்
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா, கடந்த 2ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
தைப்பூச தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று இரவு 8.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. வள்ளி-தெய்வானை-சமேதரராக முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
பாதையாத்திரை
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாதயாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்காண பக்தர்கள் பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர் இவர்கள் பழனி இடும்பன்குளத்தில் புனித நீராடிய பிறகு அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
அரோகரா முழக்கம்
நேற்று மகா பிரதோஷம் என்பதால், காலை முதலே மலைக்கோவில், திருஆவினன்குடி உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வெளிப்பிரகாரங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் - பழனி சாலை, மதுரை சாலை, தாராபுரம் சாலை என திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
பாத யாத்திரை பக்தர் களுக்கு உதவுவதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.