தைப்பூசம் தெப்பத்திருவிழா - சமயபுரம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலம்
சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெற்ற தைப்பூசம் தெப்ப திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி: திருச்சியை அடுத்த திருவானைக்காவல் ஜம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தைத்தெப்ப திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. தெப்பத்தில் உலா வந்த சுவாமி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானில் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக பக்தர்களால் போற்றப்படுவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் தெப்ப விழா கோயில் வளாகத்திலுள்ள தெப்பக் குளத்திலும், தை மாதத்தில் நடைபெறும் விழா கோயிலின் வெளியேயுள்ள இராமதீா்த்தக் குளத்திலும் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். முக்கிய நிகழ்ச்சியான தெப்ப விழாவையொட்டி புதன்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமியும், அம்மனும் மரக்கேடயத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனா்.
வழிநெடுக உபயங்கள் கண்டருளி, இராமதீா்த்தக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தைத்தெப்பத்தில் 6.10 மணிக்கு எழுந்தருளினா். தெப்பம் மூன்று முறை சுற்றி வலம் வந்தபோது கரையில் காத்திருந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் அங்கிருந்து சுவாமியும், அம்மனும் புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தனா்.
திருவிழாவின் நிறைவு நாளான இன்று காலை 7 மணிக்கு கொள்ளிடத்தில் தீா்த்தவாரி கண்டருளி, 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னம், ரிஷபம், யானை, வெள்ளி, சேஷ வாகனம் ஆகியவற்றில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், மாலை 6 மணிக்கு அபிஷேகமும், இரவு 8.15 மணிக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க இரவு 8.25 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். அப்போது தெப்பத்தை சுற்றி நான்கு புறங்களிலும், கூடிஇருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வணங்கினர்.
பத்தாம் நாளான இன்று காலை 7.31 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் தைப்பூசத்திற்கு கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, வழிநடை உபயங்கள் கண்டருளி பின்னர் நொச்சியம் வழியாக வடகாவேரி சென்றடைகிறார். அங்கு மாலையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் இரவு 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
நாளை வடதிரு காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார் அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி இறக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை சென்றடைகிறார்.