தை வெள்ளி: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் விரதம் - கடன் தொல்லை நீங்கும்
தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். அம்மனை வணங்கினால் குலம் தழைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.
மதுரை: தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எத்தனை முக்கியமோ அதுபோல தை வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. தை மாத முதல் வெள்ளிக்கிழமை இன்று மஹிஷாசுர மர்த்தினியையும், ப்ரத்யங்கிரா தேவியையும் வழிபடும் விதமாக 1000 மஞ்சள் கிழங்கு கொண்டு மாபெரும் துர்கா யாகம் நடைபெறுகிறது. மேற்கண்ட யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தெய்வங்களை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் வளம் பல சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் "யக்ஞஸ்ரீ" முரளிதர ஸ்வாமிகள்.
தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு மிகவும் விசேஷமானவை. தை முதல் வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மையாவும் கிடைக்கும். செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சமர்பித்து வணங்குவது சிறப்பு.
தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபட வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!
தை மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான இன்று வீட்டில் பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ செய்து, நைவேத்தியம் செய்து ஸ்வாமி படத்துக்கு முன்னே அமர்ந்து பிரார்த்தனை செய்ய நன்மைகள் நடைபெறும்.
மகாசக்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டியும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெற வேண்டியும், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் கிடைத்து குலம் தழைக்க வேண்டியும் சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும் விதத்திலும், குடும்பத்தில் மங்கல காரியங்கள் விரைவில் நடைபெறவும் அன்னை பராசக்தியை வேண்டி நடைபெறும் யாகங்களில் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களிலிருந்தும், வேலூர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இங்கு வந்து, ப்ரத்யங்கிரா தேவியையும், நவகன்னியையும், மஹிஷாசுர மர்த்தினியையும் பிரார்த்தனை செய்து, மிளகாய் வற்றல், நவதான்னியங்கள், வேப்ப எண்ணெய், மஞ்சள் போன்ற பொருட்களை யாக குண்டத்தில் சேர்த்து, அம்பாளை வணங்கி மாங்கல்ய சரடு, திருஷ்டி கயிறு போன்ற பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தை செவ்வாய், வெள்ளி முதலான நாட்களிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கும், அஷ்ட பைரவருக்கும், காலபைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு பூஜைகளும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன .