தைப்பூசம் நாளில் தாமிரபரணியில் தீர்த்தமாடிய காசிபநாதர் - என்னென்ன விஷேசம் தெரியுமா?
Recommended Video
மதுரை: தை மாதத்தில் முழு நிலவு நாளில் பூசம் நட்சத்திரம் இணைவது வெகு சிறப்பு. இந்த புண்ணிய நாள் தைப்பூச திருவிழாவாக உலகமெங்கிலும் உள்ள தமிழக மக்களால் கொண்டாடப்படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. முருகன் ஆலயங்களில் மட்டுமல்லாது சிவ ஆலயங்களிலும் தைப்பூசம் விசேசமாக நடைபெறுகிறது.
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா பழனி முருகன் கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலையெங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்க காவடிகள் ஆடிவருவதைக் காண்பதே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது.
27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். இந்த நன்னாளில் அன்னை பார்வதி தேவியார் தனது மகன் முருகனுக்கு சக்தி வேல் எடுத்துக்கொடுத்து தாரகன் எனும் அரக்கனை வென்று வரும்படி அனுப்பிய நிகழ்ச்சியே தைப்பூச விழாவாக கொண்டாடப்படுகிறது என்பதால் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காது என்பது நம்பிக்கை.
ஞானசம்பந்தர் பூம்பாவை
ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.
சிவ பார்வதி தாண்டவம்
தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் வியாக்ர பாதர் இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
நான்காம்படை வீடு
நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில், தைப்பூச திருவிழா பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான இன்று, பிரகாரத்தில் இருந்து தங்க மூலம் பூசப்பட்ட மயில் வாகனத்தில் சுப்ரமணியன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக சென்று காவிரியாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மகாலிங்க சுவாமி ஆலய தேர்கள்
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் ஒருபகுதியாக 5 தேர்களின் திருவிழாவில், மகாலிங்க சுவாமி, பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் திருவீதி உலா வந்தனர்.
காசிப நாத சுவாமி தீர்த்தவாரி
தாமிரபரணி நதியின் வட கரையில் அமைந்துள்ள காசிபநாத சுவாமி ஆலயத்தில் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காசிப முனிவா் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசன் என்பதால் இத்தல இறைவனுக்கு 'காசிப நாதா்' என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
இந்த கோவிலின் அருகில் பாயும் தாமிரபரணி நதியில் தேவிதீா்த்தம், சாலாதீா்த்தம்,தீப தீா்த்தம்,காசிபதீா்த்தம்,கிருமிகர தீா்த்தம்,கோகில தீா்த்தம் எனும் தீா்த்தங்கள் சோ்ந்து மொத்தம் ஏழு தீா்த்தங்கள் இங்கே சங்கமித்திருப்பதாக ஐதீகம். தைப்பூசம் மற்றும் தை அமாவாசை தினங்களில் காசிநாத சுவாமி அம்பிகை மரகதாம்பிகையோடு தீா்த்தவாாி கண்டார்.