தைப்பூச திருவிழா: முருகனை காண வரும் பக்தர்கள் காவடி எடுப்பது ஏன் தெரியுமா
முருகப் பெருமானுக்கு, சித்ரா பவுர்ணமி, ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், மாசி மகம் போன்ற நாட்களில் காவடி எடுத்து வருவதென்பது நடந்து வந்தாலும், தைப்பூச திருநாளில் தான் லட்சக்கணக்கான பக்தர்கள்
மதுரை: தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா பிப்ரவரி 8ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் காவடி சுமந்து வந்தும் அலகு குத்தியும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காவடி சுமப்பது ஏன் என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல் உள்ளது. முருகனுக்கு முதன் முதலாக காவடி சுமந்தது இடும்பன் என்கிறது புராண கதை.
முருப்பெருமான் இடும்பனை நோக்கி, இடும்பனே இனி நீ இம்மலையின் அடிவாரத்தில் காவல் புரிந்து வருவாயாக. நீ எப்படி சிவகிரி, சக்திகிரியை காவடியாக தூக்கிக்கொண்டு வந்தாயோ, அது போலவே, எம் அடியார்கள், அவர்கள் தம் காணிக்கைகளை காவடியாக எடுத்து வந்து, தம் மனக்குறைகளை நீக்கிக்கொள்வார்கள். அந்தப் பெருமைகள் அனைத்தும் உன்னையே சேரும். உன் புகழ் ஓங்கும், நீ சித்தியடைவாய் என்று அருளாசி புரிந்தார்
பழந்தமிழர்கள் கொண்டாடிய அனைத்து திருவிழாக்களும் ஏதாவது ஒரு தத்துவத்தின் அடிப்படையிலும், அறிவியல் பூர்வமாகவும், இறை நம்பிக்கையின் பேரிலும், இயற்கையோடு ஒன்றிணைந்ததாகவும் தான் இருக்கும். அது போலத்தான், தமிழர்கள் கொண்டாடும் முருக வழிபாடும். முருக வழிபாடு என்பது தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களிலேயே மிகவும் தொன்மையானதாகும்.
தைப்பூச திருவிழாவைப் பற்றி பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற பழம்பெரும் சங்க இலக்கிய நூல்களிலேயே விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தாலும், வேறு எந்த ஒரு கடவுளுக்கும் இல்லாத வகையில், ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானுக்கு மட்டும் காவடி எடுக்கும் பழக்கம் பழங்காலம் தொட்டு தொடர்ந்து வருகிறது.
தைப்பூசம் பழனியில் கோலாகலமாக தொடங்கியது - முருகனை எந்த கோலத்தில் தரிசிக்கலாம்
தைப்பூசமும் காவடியும்
முருகப் பெருமானுக்கு, சித்ரா பவுர்ணமி, ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், மாசி மகம் போன்ற நாட்களில் காவடி எடுத்து வருவதென்பது நடந்து வந்தாலும், தைப்பூச திருநாளில் தான் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்நாளில் தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
பழனி முருகனும் காவடியும்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான திருஆவினன்குடி எனப்படும் பழனி மலை முருகனுக்கு தான் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக காவடி எடுத்துவந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு. பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி வரும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் அசுரனான இடும்பன் தான். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது குறுமுனியான அகத்தியர் தான்.
நான் குமரக்கடவுள் அடிமை
இடும்பன் பிறப்பினால் அசுரனாக இருந்தாலும், இறை பக்தி மிகுந்தவன். அவன் சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனுடைய தவத்தை மெச்சிய ஈசன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு இடும்பன், ‘எம்பெருமானே, சூரபத்மனை சம்ஹாரம் செய்த கந்தவேள் குமரனின் அடியோனாக யாம் வாழ தாங்கள் அருள்புரிய வேண்டுகிறேன்' என்று வேண்டினான். ஈசனும் அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். சிவபெருமான், இடும்பனுக்கு அருள்புரிந்த இடமானது, தற்போது இடும்பாவனம் என அழைக்கப்படுகிறது. அந்த இடம் திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் ரயில் மார்க்கத்தில், கோவிலூர் என்ற இடத்தில் உள்ளது.
அகத்தியர் வணங்கிய சிவகிரி-சக்திகிரி
சிவபெருமானின் ஆசியை முழுமையாகப் பெற்ற குறுமுனியான அகத்தியர், கைலாய மலையில் இருந்த இரண்டு சிகரங்களை சிவமாகவும், சக்தியாகவும் மனதில் கொண்டு சிவகிரி-சக்திகிரி என்று பெயரிட்டு வழிபட்டு வந்தார். அந்த இரண்டு சிகரங்களையும், தன்னுடைய இருப்பிடமான பொதிகைமலைக்கு கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று ஆவல் கொண்டார். அந்த இரண்டு மலைகளையும் கொண்டு வர, முருகப்பெருமானை வழிபட்டார். முருகன் திருவருளால், சிவகிரியையும் சக்திகிரியையும் கொண்டு வரும் ஆற்றலைப் பெற்று, கேதாரம் என்னும் இடம் வரையில் கொண்டு வந்தார். ஓய்வெடுப்பதற்காக அருகில் இருந்த வனத்தில் தங்கினார்.
அகத்திருக்கு உதவிய இடும்பன்
அச்சமயத்தில், அந்த வழியாக வந்த இடும்பனும், அவனது மனைவியும், அகத்திய முனிவரை வணங்கி தங்களை காத்து அருள்புரிய வேண்டினர். அகத்திய முனிவரும், தான் கொண்டு வந்த சிவகிரி-சக்திகிரியை தன்னோடு தென்திசை நோக்கி கொண்டு வந்தால், உனக்கு புகழும் சித்தியும், இவ்வுலகம் உள்ளவரையில் உன்னுடைய பெருமையும் நிலைத்திருக்கும் என்றார். அதைக்கேட்ட இடும்பன், மகிழ்ச்சியுற்று அந்த இரண்டு மலைகளையும் தூக்க முயற்சித்தான். அவனால், மலைகளை அசைக்கக்கூட முடியவில்லை.
முருகப்பெருமானின் மூலமந்திரம்
எத்தனையோ மலைகளை எல்லாம் அசால்ட்டாக தூக்கி வீசியெறிந்த இடும்பன், அசையாமல் இருக்கும் மலைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, இந்த சிறு குன்றுகளை குறுமுனிவர் எப்படி தூக்கி வந்தார் என்று வியந்தான். ஒரு முனிவர் தூக்கிவந்த குன்றுகளை அசுரனான தன்னால் தூக்க முடியவில்லையே என்று வருந்தினான். உடனே அகத்திய முனிவரை வணங்கி அந்த மலைகளை தூக்கும் சக்தியை தந்தருளவேண்டினான். முனிவரும் அகமகிழ்ந்து, இடும்பனுக்கு மலைகளை தூக்கும் சக்தியை அளிக்கம் எம்பெருமான் முருகப்பெருமானின் மூலமந்திரத்தையும், அதை வழிபடும் முறையையும் உபதேசித்தார்.
காவடியாக மாறிய நாகங்கள்
அகத்திய முனிவர் சொன்னதைக் கேட்டு, அவரை வணங்கி வலம் வந்து, முருகப்பெருமானின் மூலமந்திரத்தை மனதிற்குள் ஜபம் செய்தான். அப்போது எட்டு நாகங்கள் கயிறுகளாகவும், பிரமதண்டம் புஜதண்டமாகவும் வந்தன. அதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட இடும்பன், முனிவரின் தவ விலிமையையும், முருகப்பெருமானின் மந்திர ஆற்றலையும் எண்ணி வியந்தான். எட்டு கயிறுகளையும் இரண்டு உறிகளாக செய்து பிரமதண்டத்தின் இரண்டு பக்கத்திலும் இணைத்து, முருகனின் மூலமந்திரத்தை ஜபித்து, முழங்காலை மண்ணில் ஊன்றிக்கொண்டு தண்டத்தை தோளில் வைத்துக்கொண்டு முருகனின் திருநாமத்தை உரக்க கூறினான்.
திருஆவினன்குடியில் இளைப்பாறல்
முருகனின் திருநாமத்தை சொன்னதுமே, இரண்டு மலைகளும் காற்றென பறந்து வந்தன. அவற்றை காவடியாக தோளில் சுமந்துகொண்டு, முனிவருடன் தென்திசை நோக்கி பயணமானான். வரும் வழியில், தான் தூக்கி வரும் காவடியின் சுமை தெரியாமல் இருக்க, முருக மந்திரத்தை மனதில் ஜபித்துக்கொண்டும், முருகனின் நாமத்தை பாடிக்கொண்டும் வரும்போது, சிறிது இளைப்பாறவேண்டி, திருஆவினன்குடி என்ற இடத்தில், காவடியை இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினார்.
இடும்பனை கிண்டலடித்த சிறுவன்
இளைப்பாறி முடிந்து எழுந்த இடும்பன், மீண்டும் காவடியை தூக்க முயன்றான். அவனால் முடியாமல் போகவே, அவனது மனைவியான இடும்பியும் துணைக்கு வந்து மலைகளை தூக்க முயன்று முடியாமல் போகவே, செய்வதறியாது திகைத்து நின்றான் இடும்பன். அப்போது அருகில் இருந்த வில்வமர நிழலில் கையில் தண்டுடன் ஒரு சிறுவன் நின்றுகொண்டு, இடும்பனின் இயலாமையை கண்டு எள்ளி நகைத்தான்.
இடும்பிக்கு காட்சியளித்த முருகன்
சிறுவன் தன்னை எள்ளி நகையாடுவதைக் கண்டு கடுப்பான இடும்பன் கோபம் கொண்டு, சிறுவனை தாக்க முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. சிறுவன் மறைந்து மீண்டும் அவன் முன்னால் நின்று ஆட்டம் காட்டியதால், கோபம் தலைக்கேறி, மீண்டும் சிறுவனை தாக்க சீறிப்பாய்ந்தான். பாய்ந்த கணத்தில் பூமியின் மீது விழுந்து மயக்கமானான். இதைப்பார்த்து பதறிய இடும்பனின் மனைவி இடும்பி ஓடிவந்தாள். வந்திருக்கும் சிறுவன் முருகப்பெருமான் என்பதை அறிந்து, ஐயனே இடும்பனின் பிழை பொறுத்து எனக்கு மாங்கல்ய பிச்சை தரவேண்டும் என்று வேண்டினாள்.
இது என்னுடைய மலை
தன்னை சரணடைந்து, வேண்டும் வரம் கேட்கும் அனைவருக்கும் வரம் அருளும் கந்தக்கடவுள், இடும்பியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி, தன்னுடைய கடைக்கண்ணால் இடும்பனை நோக்கினார். அவனும் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது போல் எழுந்து முருகப்பெருமானை வணங்கி நின்றான். முருகப்பெருமான் இடும்பனை நோக்கி, இடும்பனே, இந்த மலைகள் எனக்குரியவை, அவை இங்கேயே இருக்கட்டும், அவற்றின் மீது யாம் எழுந்தருளி இருப்போம்.
மலையின் காவலனான இடும்பன்
இடும்பனே, இனி நீ இம்மலையின் அடிவாரத்தில் காவல் புரிந்து வருவாயாக. நீ எப்படி சிவகிரி, சக்திகிரியை காவடியாக தூக்கிக்கொண்டு வந்தாயோ, அது போலவே, எம் அடியார்கள், அவர்கள் தம் காணிக்கைகளை காவடியாக எடுத்து வந்து, தம் மனக்குறைகளை நீக்கிக்கொள்வார்கள். அந்தப் பெருமைகள் அனைத்தும் உன்னையே சேரும். உன் புகழ் ஓங்கும், நீ சித்தியடைவாய். என்னை காண வருபவர்கள், முதரில் உன்னை வணங்கிய பின்பு தான், மலை மீதேறிவந்து எம்மையும் வணங்குவார்களாக, என்று அருளாசி புரிந்தார் முருகப்பெருமான்.
காவடி சுமக்கும் பக்தர்கள்
முருகப்பெருமான் இட்ட கட்டளையின் படியே, இடும்பன் பழனி மலையின் அடிவாரத்தில் இருந்துகொண்டு காவல் புரிந்து வருகிறான். பழனி முருகனைக் காணவரும் பக்தர்கள், முதலில் இடும்பனை வணங்கி வழிபட்ட பின்பே, மலையேறிச் சென்று பழனி மலை தண்டாயுதபாணியை வணங்கி வழிபடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று தைப்பூச திருநாள் வருகிறது. அன்றைக்கு வேண்டியவர்க்கு வேண்டும் வரமருளும் முருகப்பெருமானை வணங்கி வாழ்வில் வளம் பெருவோம்.