தைப்பூசம் 2020: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்
வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகளை விலக்கி தைப்பூச ஜோதி தரிசனம் நாளை நடைபெறுகிறது. இதில் காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி
கடலூர்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமி நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் நாளை கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் இந்த விழா சிறப்பாக தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். வள்ளலார் என போற்றப்பட்ட அவர், திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.
தைப்பூசம் 2020: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் பழனி பாதயாத்திரை
தைப்பூச திருவிழா
வள்ளலார் முக்தி அடைந்த பூசநட்சத்திரத்தன்று மாதந்தோறும் சத்திய ஞானசபையில் திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 149வது தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டு, 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
தீப ஜோதி ஒளி
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.
ஏழு திரைகள்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான். ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான்.
ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் காணலாம்.
சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கம்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த வள்ளலார் அன்னதானச் சாலை ஒன்றை அமைத்தார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருக்கிறது.
ஜோதியுடன் கலந்த வள்ளலார்
இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே ‘பேருபதேசம்‘ என்று சொல்லப்படுகிறது.
பூச நட்சத்திர வழிபாடு
வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இறைக்காட்சியோடு தங்களையே தாங்கள் காணும் உணர்வு அந்தப் பொழுதில் 'அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' என்று முழக்கமிட்டு பக்தியுடன் வழிபடுகின்றனர்.