தைப்பூச நாளில் திருவிடைமருதூர் மகாலிங்கசாமியை தரிசனம் பண்ணுங்க - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கு உகந்த திருத்தலமாக திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் உள்ளதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. காவிரிக்கரையோரம் அமைந்திருக்கும் பாடல் பெற்ற முப்பது திருத்தலங்களில் முக்க
மதுரை: திருவிடைமருதூர் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கு உகந்த திருத்தலமாக திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் உள்ளதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. காவிரிக்கரையோரம் அமைந்திருக்கும் பாடல்பெற்ற முப்பது திருத்தலங்களில் முக்கியமான திருத்தலம் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில். இது காசிக்கு சமமான திருத்தலமாகும். தைப்பூச நாளில் கோவிலுக்குள் இருக்கும் தீர்த்த குளத்தில் நீராடி, இத்தல இறைவனை வழிபட்டால் செய்வினைகளால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் பெருவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் தைப்பூச திருநாள். முருகனை வழிபடும் திருவிழாக்களிலேயே முக்கியமான விழாக்களில் ஒன்றாக உள்ளது தைப்பூச திருவிழா. இத்திருநாள் முருகனுக்கு மட்டும் விஷேசமான நாளாக இருப்பதோடு, சிவபெருமானுக்கும் உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் நடராஜப் பெருமான் தில்லையம்பலத்திதல் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி மகரிஷி, வியாக்ரபாதர் மற்றும் படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகியோருக்கும் தரிசனம் அளித்த நாளாகும்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிவாலயங்களில் எம்பெருமான் ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். மேலும், பூச நட்சத்திரம் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரிய நட்சத்திரம் என்பதால், தைப்பூச நாளில் குருபூஜையும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்நாளில் புனித நீர் நிலைகளில் நீராடி குருவை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் உயர்ந்த ஞானம் பெற்று சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். பழங்காலத்தில் இருந்தே, தைப்பூச திருநாள் தமிழகத்தில் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை கல்வெட்டுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், தைப்பூச திருநாள், பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம்
ஒருவன் முற்பிறவியில் கோவிலை இடித்தல், சுவாமி சிலைகளை களவாடுதல் ஆகி தீவினைகளை செய்தவர்கள், இப்பிறப்பில் அந்தணர் ஒருவரை கொல்லுதல், பெண்ணை ஆசை காட்டி பொய் சொல்லி, அவளுடன் கூடியிருந்துவிட்டு பின்பு ஏமாற்றுதல் போன்ற பாவச் செயல்களை செய்தாலோ, ஜாதக ரீதியில் ஒருவருக்கு சனியுடன் குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்தாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பாடல்பெற்ற திருத்தலம்
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கு உகந்த திருத்தலமாக திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் உள்ளதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. காவிரிக்கரையோரம் அமைந்திருக்கும் பாடல் பெற்ற முப்பது திருத்தலங்களில் முக்கியமான திருத்தலம் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில். காசிக்கு சமமான திருத்தலமாகும். தைப்பூச நாளில் கோவிலுக்குள் இருக்கும் தீர்த்த குளத்தில் நீராடி, இத்தல இறைவனை வழிபட்டால் செய்வினைகளால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் பெருவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
மன்னனின் தீர்த்தயாத்திரை ஆசை
முன்னொரு காலத்தில், சோழவள நாட்டை அம்சத்வசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு தீர்த்த யாத்திரை செல்லவேண்டும் என்பது வெகு நாள் ஆசை. ஆனால், நாட்டின் மன்னனாக இருந்து, அரசாட்சி செய்து மக்களை காக்கவேண்டிய கடமை முன்நிற்பதால், யாத்திரை செல்ல முடியவில்லை. ஆகவே, தனக்கு பதிலாக வேத மந்திரங்கள் கற்றறிந்த ஒரு அந்தணருக்கு தேவையான பொருளுதவிகள் அளித்து தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைத்தான். அந்தணர் திரும்பி வரும் வரையில், அவரது குடும்பத்திற்கும் தேவையான பொருளுதவியையும் அளித்து பாதுகாத்து வந்தான் மன்னன் அம்சத்வசன்.
அந்தணரைக் கொன்ற மன்னன்
அந்தணர் தீர்த்த யாத்திரை சென்று நீண்ட நாட்கள் கழிந்தன. அந்த சமயத்தில் ஒரு நாள் இரவு வேளையில், அம்சத்வசன் மாறுவேடத்தில் நகரை சுற்றிப் பார்க்க கிளம்பினான். போகும் வழியில் அப்படியே அந்தணரின் குடும்பம் எப்படி உள்ளது என்பதையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்று அந்தணரின் வீட்டுக்கு சென்று பார்த்தான். அந்த சமயத்தில் அந்தணரின் வீட்டிற்குள் இருந்து ஒரு ஆடவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன், கோபாவேசமாக வீட்டுக்குள் நுழைந்து அந்த நபரை குத்திக் கொன்றான்.
மன்னனை துரத்திய அந்தணரின் ஆவி
ஆனால், அதன் பிறகே தான் கொன்றது அந்த அந்தணரை என்பது அம்சத்வசனுக்கு தெரியவந்தது. அதனால் பயத்தில், அந்தணரை கொன்ற பாவம் தன்னை பீடித்துக்கொள்ளுமே என்று அஞ்சி நடுங்கினான். அதற்கு ஏற்றார்போலவே, பரிதாபமாக கொலையுண்ட அந்தணரின் ஆவியானது, இரவிலும் பகலிலும் இடைவிடாது துன்புறுத்திக்கொண்டே வந்தது. அந்தணரைக் கொன்ற பாவத்தை போக்க தீர்த்த யாத்திரையாக பல கோவில்களுக்கு சென்றான்.
தைப்பூச விழாவுக்கு பொருளுதவி
இறுதியில், காவிரிக்கரையோரம் அமைந்துள்ள திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கசுவாமி கோவிலுக்கு வந்து சேர்ந்தான். கோவிலுக்குள் அமைந்திருக்கும் தீர்த்தக் குளத்தில் நீராடினான். மன்னன் அம்சத்வசன் நீராடி முடித்த உடனேயே, அவனை பீடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் அவனை விட்டு பூரணமாக நீங்கிவிட்டது. அப்படி அந்தணரின் ஆவி மன்னனை விட்டு நீங்கிய நாள் தைப்பூச திருநாள் ஆகும். இதையறிந்த மன்னன், அக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா நடைபெற பெரும் நிதியுதவி செய்தான் என்று தலவரலாறு தெரிவிக்கின்றன.
வரகுண பாண்டிய மன்னன்
அதேபோல், மதுரையை ஆண்ட வரகுண பாண்டிய மன்னன், ஒரு நாள் வேகமாக வந்து கொண்டிருந்தான். அப்போது வயதான ஒரு அந்தணர் அந்த சமயத்தில் தெருவை கடக்க முயல, வேகமாக வந்த குதிரையின் காலடி பட்டு உயிரிழந்தார். அந்த பாவத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பிய பாண்டிய மன்னன், பல கோவில்களுக்கு சென்று வழிபட்டான். ஆனல், அவனது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகவில்லை.
சொக்கநாதரின் யோசனை
இறுதியில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலுக்கு வந்து நீராடினால் தோஷம் நீங்கும் என்பது தெரியவந்தது. ஆனால், சோழ நாட்டுக் கோவிலுக்கு சென்று வழிபட அவனது மனம் இடம் தரவில்லை. ஆகவே, தன்னுடைய இஷ்ட தெய்வமான சொக்கநாதரை வேண்டினான். சொக்கநாதரும், 'இன்னும் சில நாட்களில் சோழமன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான். உன்னிடம் மோதி தோற்று திரும்பி ஓடுவான். இருந்தாலும், அவனை துரத்திக்கொண்டு சோழ நாட்டுக்கு செல். அப்போது திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்' என்று யோசனை சொன்னார்.
மகாலிங்கசுவாமி தரிசனம்
சொக்கநாதர் சொன்னது போலவே, சில நாட்களில் அனைத்தும் நடந்தேறின. சோழனை துரத்திக்கொண்டு சென்ற வரகுண பாண்டியன், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலுக்கு சென்று தீர்த்தக்குளத்தில் நீராடினான். நீராடி விட்டு மகாலிங்கசுவாமியை வழிபட்டு முடித்த உடனேயே, அதுவரை அவனை பீடித்திருந்த அந்தணரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த அற்புதம் நடந்தேறியதும் புனிதமான தைப்பூச திருநாளில் தான். ஒரு தைப்பூச திருநாளில் தான், திருஞானசம்பந்தர், சாம்பலில் இருந்து பூம்பாவையை உயிர்ப்பிக்க செய்தார். அந்த அற்புதம் நிகழ்ந்ததும், தைப்பூச திருநாளில் தான்.