பழனி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா... பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் - அரோகரா முழக்கம்
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
பழனி : அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வதுதான். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருச்செந்தூர், பழனிக்கு பக்தர்கள் பாதையாத்திரையாக சென்று கொண்டுள்ளனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத்திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 27ஆம் தேதி திருக்கல்யாணமும், 28ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31ஆம் தேதி வானவேடிக்கையுடன், தெப்ப உற்சவம் மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது.
இதே போல முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது.