மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூசம் தெப்பத்திருவிழா - பக்தர்கள் பரவசம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தைப்பூச தெப்பத்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தெப்பத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
மதுரை: உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரைக்கும் 12 மாதங்களும் திருவிழா கோலம்தான். சித்திரை திருவிழா தொடங்கி பங்குனி உத்திரம் வரைக்கும் தினம் தினம் திருவிழா காணும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு இன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரையில் தைப்பூச தெப்பத்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்பத் திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சிந்தாமணியில் கதிரறுப்பு
விழாவின் 11ஆம் நாளான நேற்று அனுப்பானடி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் கோவிலில் இருந்து புறப்பாடாகி சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மதுரை தெப்பக்குளம்
முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டனர்.
சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி அம்மன் சன்னதி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அங்கிருந்து முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர்.
வலம் வந்த இறைவன் இறைவி
மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்மன் இன்று காலை எழுந்தருளினர். சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மைய மண்டபத்தை இரண்டு முறை வலம் வந்தது. பின், மீண்டும் முக்தீஸ்வரர் கோயிலில் சேர்த்தியானது. மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியதும், அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வருவார். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுவார்கள்.
கோவிலில் நடை அடைப்பு
தெப்பத் திருவிழாவையொட்டி இன்று சுவாமி கோவிலுக்கு திரும்பும்வரை கோவில் நடைசாத்தப்பட்டிருந்தது. ஆனால் பக்தர்களின் நலன் கருதியும், வெளியூர்களில் இருந்து வருவர்களின் நலன் கருதியும் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மட்டும் திறந்து வைக்கப்படுகிறது. இதனை காண வருபவர்கள் வடக்கு கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 12.30 மணியும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.
திருச்சியில் தெப்ப உற்சவம்
இதேபோல சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நீர் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நடைபெற்றது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
8ஆம் திருநாளான நேற்று முன்தினம் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். நேற்று காலை 10 மணிக்கு கோவிலிலிருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இரவு 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் தெப்பத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர், 3 முறை வலம் வந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.