தைப்பூசம் திருவிழா பழனியில் கோலாகலம் - திருச்செந்தூரில் கடலில் நீராடி முருகனை தரிசித்த பக்தர்கள்
தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் ஆலயங்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை: தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கடல் நீராடிய பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. அதிலும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி, முருக பெருமானுக்குரிய வழிபாட்டில் முக்கிய நாளாக இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச திருநாள் கொண்டாடப்படுவதற்கு தமிழர்களின் வானியல் அறிவும் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. பூசம் என்பது வானில் இருக்கும் ஒரு நட்சத்திர கூட்டம். தைப்பூசத்தன்று சூரியன் மகர ராசியிலும் சந்திரன் பூசநட்சத்திரத்தில் கடக ராசியில் வடக்கும் சஞ்சரிக்கும். இந்த நாளை சிறப்பான நாளாக உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் இந்த தைப்பூச திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர் பலவிதமான நேர்த்திக்கடன்களை பய பக்தியுடன் செலுத்தினர்.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளி ஆடு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், புதுச்சேரி சப்பரம், தங்கக் குதிரை, தங்க மயில் போன்ற வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினாா்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பக்தி பரவசத்துடன் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு குவிந்து வருகின்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மச்ச காவடி என பல வகையான காவடிகளை எடுத்து மேல தாளத்துடன் முருகனை தரிசித்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணமும் வெள்ளித்தேரோட்டமும் நேற்று நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று மலை அடிவாரத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பழனியில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்கின்றனர்.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பல மாதங்களுக்குப் பிறகு கடலில் நீராடிய பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். அலகு குத்தியும் காவடிகள் சுமந்தும் பாதையாத்திரையாக வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.