தலை தீபாவளி - புது மணத்தம்பதியருக்கு திகட்ட திகட்ட விருந்து - தங்கத்தில் பரிசு
தீபாவளி வந்தாலே கொண்டாட்டம்தான். புது துணி, பலகாரம், பட்டாசுகள் என களை கட்டும். தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைகளுக்கு குஷியான தீபாவளி. அதே நேரத்தில் மாமனாருக்கோ தலை தீபாவளி, தலைவலியாகிவிடும்.
சென்னை: திருமணமாகி மறு வீட்டு விருந்துக்கு வந்து விட்டு போன மகளை தீபாவளிக்கு அழைத்து சீர் கொடுத்து கொண்டாடுவது பெற்றவர்களுக்கு மகிழ்ச்சிதான். புது மாப்பிள்ளைகளுக்கு தலை தீபாவளி குஷியாக இருந்தாலும் பெண்ணை பெற்ற தகப்பன்களுக்கு தலைவலியாகிவிடும்.
திருமணத்திற்குப் பின்னர் முதல் முறையாக கொண்டாடப்படுகிறது என்பதால் அதை தலை தீபாவளி என்கின்றனர். திருமணம் செய்து செல்லும் வரை அம்மா வீட்டில் தீபாவளி கொண்டாடிய மகள் முதல் முறையாக மாப்பிள்ளை வீட்டில் இருக்கும் போது மனது வாடிப்போய் விடக்கூடாதே என்று பெற்றவர்கள் தங்களின் மகளை, மாப்பிள்ளையுடன் தலை தீபாவளிக்கு அழைத்து விருந்து வைக்கின்றனர்.
தலை தீபாவளிக்கு புது தம்பதியரை அழைப்பதே ஒரு கலை. பெண்ணுக்கு உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் இருந்தால் அவர்கள்தான் அழைக்கப் போவார்கள். ஒரு மனையில் எவர்சில்வர் தட்டு வைத்து அதில் வெற்றிலை பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து புதுமண தம்பதியரை அழைக்கப் போவார்கள்.
புது தம்பதியினருக்கு ஆரத்தி
தீபாவளிக்கு முதல் நாளே மாப்பிள்ளை வீட்டுக்கு போய் தலை தீபாவளிக்கு அழைக்க வந்திருக்கிறோம் என்று கூப்பிட்டுக்கொண்டு வருவார்கள். ஊரில் இருக்கும் நாட்டாமை, பெரியவர்களின் வீட்டுக்கு சென்று தலை தீபாவளிக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களின் ஆசி பெற்றுக்கொண்டு புது மணத்தம்பதிகள் கிளம்பி வருவார்கள். பட்டு சேலை சரசரக்க ஒரு உற்சாகத்துடன் தாய் வீட்டுக்கு தலை தீபாவளிக்கு வரும் மகளையும், மாப்பிள்ளையையும் வீட்டு வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்வார்கள்.
களைகட்டும் விருந்து
மாமனார் வீட்டிற்கு அழைத்து சென்ற உடன் விருந்து ஆரம்பித்து விடும். பெண்ணிற்கு அக்கா இருந்தலோ, அக்கா முறையுள்ள பெண்களுக்கு திருமணம் நடந்திருந்தாலே அவர்களையும் விருந்துக்கு அழைப்பார்கள். தலை வாழை இலை போட்டு அதில் அரிசி, வெல்லம் சேர்த்த மாவு வைத்து அதில் நெய் ஊற்றுவார்கள். முந்திரி, திராட்சை, பேரிச்சை, நாட்டு வாழைப்பழம், தேன் என வரிசை கட்டும். தலை தீபாவளி வந்த தம்பதியினருக்கு சாப்பிட சாப்பிட திகட்டும் வகையில் விருந்து களைகட்டும்.
எண்ணெய் குளியல்
தீபாவளி நாளில் அதிகாலையில் மாப்பிள்ளையை எழுப்பி புது துண்டு கொடுத்து மனையில் உட்கார வைப்பார்கள். மச்சினன்தான் தலையில் எண்ணெய் வைத்து தேய்த்து விடுவார். அதே உற்சாகத்தோடு வெது வெதுப்பான வெந்நீரில் ஒரு குளியல் போட்டு விட்டு வந்தால் புது உடைகள் தயாராகவே இருக்கும். பெண்ணும் குளித்து முடித்து புத்தாடை கட்டிக்கொண்டு வர தீபாவளி விருந்து தயாராகி விடும்.
சிலபல இட்லிகள், ஈரல், கறி குழம்புகள்
தீபாவளி என்றாலே கறி சோறுதான். விடிகாலையிலேயே கிடா வெட்டி கறி எடுத்து வந்து விடுவார்கள். இட்லி ஒரு பக்கம் அண்டாவில் வெந்து கொண்டிருக்க, கறி குழம்பும், ஈரல் வறுவலும் தனித்தனியா ரெடியாகும். வாழை இலை போட்டு விருந்து பரிமாறுவது தனி கலைதான். மல்லிகைப் பூ இட்லிக்குப் பக்கத்தில் ஈரல் வறுவல் வைத்து அதற்கு பக்கத்தில் கறி குழம்பை ஊற்றி, கூடவே கொஞ்சம் தேங்கா சட்னியும் தொட்டுக்க வைப்பார்கள். இனிப்புக்கு குளோப் ஜாமுன், நெய் மைசூர்பாவும் சைடில் இருக்கும்.
திகட்ட திகட்ட விருந்து
போதும் போதும் என்று சொன்னாலும் விடாமல் சாப்பிட வைத்து திகட்ட திகட்ட விருந்து வைப்பது வழக்கம். தீபாவளி நாளில் மூன்று வேளையும் கறி சோறுதான். தலை தீபாவளி விருந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். கறி விருந்து முடிந்த பின்னர் நாட்டுக்கோழி அடித்து விருந்து கொடுப்பார்கள். அதற்கு மறுநாள் பொங்கல் சாம்பார், சட்னி, கூடவே மெதுவடை, பருப்பு வடை, கேசரி தயாராகும். ஐந்தாம் நாள் நம்ம ஊரில் சேமியா என்று சொல்வார்கள். இப்போதுதான் சேமியா பிழிய எளிதாக இருக்கிறது 20 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பாத்திரத்தில் சேமியா பிழிய தனி தெம்பு வேண்டும். அதற்கு தொட்டுக்கொள்ள கருப்பட்டியை காய்ச்சி வடிகட்டி அதில் வாழைப்பழம் போட்டு அதில் மிளகு, சுக்கு தட்டிப்போட்டு பாகு காய்ச்சி கொடுப்பார்கள். இப்போது அதை எல்லாம் கண்ணால் கூட பார்க்க முடிவதில்லை.
மோதிரம், தங்க சங்கிலி
விருந்து முடிந்து வீடு திரும்பும் புது மணத்தம்பதியினருக்கு வசதிக்கு ஏற்ப உடைகள் எடுத்துக்கொடுத்து தங்க மோதிரம், தங்க சங்கிலி பரிசளிப்பார்கள். தீபாவளி நாளில் பொன் நகைகள் பரிசளித்தால் வாழப்போன வீட்டில் மகளுக்கு செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் ஆசிர்வாதம் செய்து வழியனுப்பி வைப்பார்கள்.
சீர் பட்சணங்கள்
தலை தீபாவளி முடிந்து திரும்பும் புது மணத்தம்பதியருக்கு சீர் முறுக்கு, அதிரசம், லட்டு என பானைகள், அண்டாக்களில் வரிசை கட்டும். அதை வீடு வீடாக கொண்டு போய் கொடுத்து கூடவே தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டில் போட்ட நகைகளை சொந்த பந்தங்களுக்கு காட்டி பெருமை பட்டுக்கொள்வார்கள். இந்த கொண்டாட்டம் வசதிக்கு ஏற்ப மூன்று தீபாவளி வரை நீடிக்கும். அது மாப்பிள்ளைக்கும் மாமனாருக்கும் நீடிக்கும் உறவு முறையை பொருத்தது.