தாமிரபரணியில் மகா புஷ்கர விழா- புனித நீராட குவியும் சாதுக்கள், மடாதிபதிகள்
திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் குருபகவான் சஞ்சரித்துள்ளார். வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் மகா புஷ்கர விழா நடைபெறுவதால் ஏராளமானோர் புனித நீராட குவிந்து வருகின்றனர்.
திருநெல்வேலி: குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் தாமிரபரணி நதியில் மகாபுஷ்கர விழா நடைபெறுகிறது. புண்ணிய நதியில் புனித நீராட மடாதிபதிகளும், சாதுக்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர்.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.
பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தமே புஷ்கரம் எனப்படும். குரு பகவான் கடும் தவமியற்றி பிரம்மாவிடமிருந்து இதனைப் பெற்றுள்ளார். இந்தியாவில் பாயும் முக்கியமான 12 நதிகள் 12 ராசிக்கு ரியவையாக சொல்லப்பட்டுள்ளன. மேஷ ராசிக்குரிய நதியாக கங்கை, ரிஷபத்துக்கு நர்மதை, மிதுனத்துக்கு சரஸ்வதி, கடகத்துக்கு யமுனை, சிம்மத்துக்கு கோதாவரி, கன்னிக்கு கிருஷ்ணா, துலாமுக்கு காவிரி, விருச்சிகத்துக்கு தாமிர பரணி, தனுசுக்கு சிந்து, மகரத்துக்கு துங்கபத்ரா, கும்பத்துக்கு பிரம்மபுத்திரா, மீனத்துக்கு பிரணீதா என வரையறுக்கப்பட்டுள்ளது.
அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. திருவிளையாடல் புராணம், தாமிரபரணி மகாத்மதியம் உள்ளிட்ட நூல்களில் தாமிரபரணியின் சிறப்புகள் பற்றியும் புனித நீராடுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
மகாபுஷ்கரம் விழா
144 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. மகா புஷ்கர விழா இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தாமிரபரணி நதி தொடங்கும் பொதிகை மலையின் பூங்குளத்தில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகளில் புஷ்கர விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகாபுஷ்கரத்திருவிழாவை முன்னிட்டு புனித நீராட நாடு முழுவதிலும் இருந்தும் சாதுக்களும், மாடாதிபதிகளும் தாமிரபரணி நதிக்கரையில் குவிந்துள்ளனர்.
புஷ்கர விழா தொடக்கம்
அகில பாரதீய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசம் படித்துறையில் இன்று அதிகாலை தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கப்பட்டது. இதையொட்டி சங்கராசாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், துறவியர்கள் கலந்து கொண்டு 108 புண்ணிய நதி கலச தீர்த்தங்களை தாமிரபரணி ஆற்றில் ஊற்றினர்.
தாமிரபரணிக்கு ஆரத்தி
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்புவனம், சேரன் மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், வண்ணார் பேட்டை, எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயுதீர்த்தம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணிக்கு மஹா ஆரத்தி வழிபாடுகள் நடக்கின்றன.
ஜென்ம ராசியில் நீராடலாம்
இன்று தொடங்கி 23ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது. இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். 12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம். விருச்சிகம் தொடங்கி துலாம் வரை ராசிக்காரர்கள் தினசரி நீராடலாம். ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிடைக்கும். குடும்பத் தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும்.
தானம் கொடுப்பது நன்மை
இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர் அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி. தாமிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்ர வர்ணி'' என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிர பரணி என்றாயிற்று. இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய்வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்' பரம தர்மம் எனப்படும். நல்ல பசுவைத் தானம் செய்வதால் மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.
முன்னோர்களுக்க திதி கொடுப்போம்
இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக் கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.