தாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு : 12 நாட்களில் 70லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 11 நாட்களாக நடைபெற்ற தாமிரபரணி மகா புஷ்கரம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த 12 நாட்களில் 12 ராசிக்காரர்கள் தாமிரபரணி ஆற்றில் பூக்களை தூவி புனித நீராடியுள்ளனர்.
Recommended Video
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணியில் இந்த ஆண்டு மகா புஷ்கரம் கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இன்று மாலையுடன் விழா நிறைவடைகிறது. இதுநாள்வரை 70 லட்சம் பக்தர்கள் நீராடியதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஞாயிறன்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் நீராடி தாமிரபரணியில் பூக்களை தூவி வணங்கியுள்ளனர்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடைபெற்றது.
புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்தனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
தாமிரபரணியில் விழாக்கோலம்
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந்தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள், மங்கல ஆரத்திகள், வேள்விகள், யாகங்கள், நடைபெற்றன. நீராட வந்த பக்தர்களுக்கு 3 வேளை அன்னதானமும் வழங்கப்பட்டன. அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. படித்துறைகள் நிரம்பி வழிந்தன. வியாழக்கிழமை தொடங்கி கடந்த 5 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. விழாவில் உச்சக்கட்டமாக ஞாயிறன்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசித்தனர்.
புனித நீராடல்
பாபநாசம் தாமிரபரணியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதே போல் சிங்கை, அம்பை, சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.
சிறப்பு யாகங்கள்
குருஸ்தலமான தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.இதே போல ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.
சத்ரு சம்ஹார ஹோமம்
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது. முறப்பநாட்டில் சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த விழாவில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட வைகளை நீக்கும் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் திங்கட்கிழமை மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.
மகா புஷ்கரம் நிறைவு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11ஆம்தேதியில் இருந்து நேற்று மாலை வரை சுமார் 70 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 12ஆம்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் இன்று மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.