திருமணம் ஆகனுமா? குழந்தை பிறக்கனுமா? தாயமங்கலம் போங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: பங்குனி மாதம் மாதம் வந்துவிட்டாலே தமிழகத்தில் திருவிழா கோலம்தான். பங்குனி மாதத்தில் அனேக கோயில்களில் பங்குனித்திருவிழா தேர், தெப்பம் என கலைகட்டும். அதிலும் தென் மாவட்டங்களில் நடக்கும் கிராமக்கோவில் திருவிழாக்களைக் காண, கண்கோடி வேண்டும். அங்கே நடக்கும் வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு அர்த்தம் உண்டு. மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வருதல், கண்மலர் காணிக்கையாக்குதல், பொங்கலிடுதல் என எத்தனையோ நேர்த்திக்கடன்களை பக்தர்கள் பயபக்தியுடன் செய்வர்.
திருமண பாக்கியத்தையும் குழந்தை பாக்கியத்தையும் அளிக்கும் முத்துமாரியம்மன் கோவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு அம்மன் சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
திருவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை இரவு மின் தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.நாளை மறுநாள் ஞாயிறு காலை தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தல வரலாறு:
ஒரு முறை இப்பகுதியில் வசித்து வந்த ஒரு வணிகர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரைக்கு சென்று வருவார். மீனாட்சியின் பக்தரான அவருக்கு குழந்தைகள் கிடையாது. இவர் மீனாட்சியிடம் தனது கவலையை கூறி புலம்பினார். மீனாட்சியும் குறைகளை தீர்க்க எண்ணினாள். ஒருசமயம் இவர் மதுரை சென்றுவிட்டு ஊருக்கு வரும்போது வழியில் ஒரு சிறுமி தனியே நின்று அழுது கொண்டிருந்தாள்.
இதைக்கண்ட வணிகர் தனது கவலையை போக்கவே இக்குழந்தை கிடைந்துள்ளதாக நினைத்து மகிழ்ந்தார். குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தார். இங்குள்ள குளத்தின் கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு நீராடினார். பின் குழந்தையைக் காணவில்லை. இதனால் வருத்தம் கொண்ட வணிகர் நடந்ததை மனைவியிடம் கூறினார்.
இருவரும் தங்களுக்கு கிடைத்த குழந்தையும் சென்றதை எண்ணி உறங்கச் சென்றனர். அன்றிரவில் வணிகரின் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும், கற்றாழைக் காட்டில் ஓரிடத்தைச் காட்டி அங்கு தனது பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் மண்ணை பிடித்து வைத்து, கோவில் எழுப்பினார். பிற்காலத்தில் இவளுக்கு சிலை வடித்து கோவில் பெரியளவில் கட்டப்பட்டது. பின் இந்த அம்மனுகு முத்து மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பெற்றது.
தலபெருமை:
முத்து மாரியம்மன் நான்கு கரங்களில், உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. சிறுமியாக வந்ததால் இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். எனவே, திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.
ஜோதிடத்தில் குழந்தை பாக்கியம்:
ஒருவருக்கு திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் இரண்டிற்க்கும் குருவின் அருளோடு சுக்கிரனின் அருளும் வேண்டும். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரகம் வகிக்கிறார்.
ஒரு தம்பதியின் ஜாதகங்களில் குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.
புத்திர பாக்ய தடை ஏற்படுத்தும் ஜாதக அமைப்புகள:
ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க வாய்ப்புண்டு.
லக்னத்திற்கு ஐந்தாம் இடம் புத்திரபாக்யம் தரும் இடம். ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாவர். இந்த இரண்டும் பலமாக இருப்பது அவசியம்.
ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தாலும் ஐந்தாம் அதிபதி ராகு-கேதுவுடன் சேர்ந்து நின்றாலும் புத்திர தோஷமாகும்.
மேலும் புத்திர ஸ்தானமான ஐந்தில் நீச்சக் கிரகம் நின்றாலும் பாதகாதிபதிகள் இருந்தாலும் பத்திர தடை ஏற்படுகிறது. 6, 8, 12ம் அதிபதிகள் இருந்தால் கருச் சிதைவு. ஐந்தாம் அதிபதி நீச்சம் அடைந்தால் புத்திர தோஷம் என கூறுகிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள்.
ஐந்தாம் அதிபதி நீச்சக் கிரகத்துடன் சேர்ந்தால் புத்திரதோஷம். ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை. ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும்.
குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம். ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஐந்தாம் இடத்தை ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்.
ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை. ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம். ஆண்கள் ஜாதகத்தில் நபும்ஸ கிரகங்கள் என்று சொல்லப்படும் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தை பாக்ய தடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும்.
பெண்ணின் ஜாதகத்தில் ஜந்தாம் பாவத்தோடு பாக்கிய ஸ்தானமெனப்படும் ஒன்பதாம் பாவத்தையும் பார்க்க வேண்டும். ஒன்பதாம் பாவத்தில் மேற்கூறிய அமைப்புகள் பெண்ணின் ஜாதகத்தில் இருந்துவிட்டால் திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியம் ஒரு கேள்வி குறியாகவே அமைந்துவிடுகிறது.
குழந்தை பிராப்தம் கிடைக்கும் காலம் எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும்.
தாயமங்கலம் கோயிலில் பிரார்த்தனை:
இந்த அம்பாளை, கன்னி தெய்வமாக கருதுகின்றனர். எனவே, இவளிடம் திருமண வரம் வேண்டி கோரிக்கை வைக்கும் பெண்கள், தாலியை அம்மனின் பாதத்தில் வைத்து வணங்குவர்.
ஜாதகத்தில் எந்த காரணங்களால் திருமணத்தடை அல்லது புத்திரதோஷம் ஏற்பட்டாலும் திருமண பாக்கியம் கிடைக்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் இந்த அம்மனை வேண்டிக்கொண்டு அங்குள்ள வில்வ மரத்தில் தாலியும், தொட்டிலும் கட்டி வழிபடுவது கண்கண்ட பலனையளிக்கும் என்பது நம்பிக்கை.
விரும்பிய குழந்தை வரம்வேண்டி ப்ரார்தனை செய்துக்கொண்டு குழந்தை பிறந்தவுடன் கரும்புத்தொட்டிலில் இட்டு ப்ரார்தனையை நிறைவேற்றுவது இத்தல அம்மனின் சிறப்பாகும். பங்குனியில் நடைபெறும் திருவிழாவின் போது லட்சக்கணக்காணவர்கள் கரும்புத்தொட்டில் இடுவதை காணமுடியும். அதுவே தாயமங்கலத்தாளின் கருணைக்கு சான்றாகும்.
கண் நோய்கள் தீர இங்கு அம்மனை கண் மலர் செய்து வைத்து பிரார்த்திக்கின்றனர். அம்மன் சன்னதியில் கொடுக்கும் அபிஷேக நீரை சாப்பிட்டால் அம்மை நோய் தீரும். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பால் குடம் எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தாயமங்கலத்தாலின் கருனைக்கு பாத்திரமானவர்களில் அஸ்ட்ரோ சுந்தரராஜன் ஆகிய நானும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆண்குழந்தையாக பிறக்கவேண்டும் என எங்கள் நலம் விரும்பி ஒருவர் வேண்டியபடி எங்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்து கரும்புத்தொட்டில் இட்டு ப்ரார்தனையை நிறைவேற்றியதை நெகிழ்ச்சியுடன் இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் மானசீகமாக தாயமங்கலத்தாளை வேண்டிகொண்டால் அடுத்த பங்குனி திருவிழாவிற்க்குள் உங்கள் ப்ரார்த்தனை நிறைவேறும் என்பது நிதர்சனம்.
ஆலய நிர்வாகிகளின் தொலைபேசி எண்: 04564 - 206614