கண் நோய் தீர்க்கும் தாயமங்கலம் முத்து மாரி.... பங்குனி தேரோட்டம் பார்க்க வாங்க smart
தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் மார்ச் 29ம் தேதி இரவு 10.35 மணிஅளவில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை: தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா மார்ச் 29 ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பங்குனி மாதம் வந்துவிட்டாலே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திருவிழா கோலம்தான். அனேக கோவில்களில் பங்குனி மாதத்தில் தேர் திருவிழா, தெப்ப திருவிழா என திருவிழாக்கள் களை கட்டும். அதுவும் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களை காண கண் கோடி வேண்டும். அங்கு நடைபெறும் ஒவ்வொரு வழிபாடு, சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும்.
மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருதல், கண்மலர் காணிக்கையாக்குதல் என பல்வேறு நேர்த்தி கடன்களை பயபக்தியுடன் செய்வர்.
தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மார்ச் 29ம் தேதி காலை சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்ற பின்னர் இரவு 10.35 மணிஅளவில் கோவில் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும். இதை தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும்.
திருவிழாவின் போது தினமும் முத்துமாரியம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து அம்மன் சிம்மம், காமதேனு, அன்ன பூத வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 5ம்தேதி பொங்கல் இடுதலும், ஏப்ரல் 6ம்தேதி தேரோட்டமும் , ஏப்ரல் 7ம்தேதி காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தல் கரும்பு தொட்டில் சுமத்தல், மாவிளக்கு எடுத்தல் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர். அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். ஏப்ரல் 8ம் தேதி பூப்பல்லக்கில் பவனி வருதலும், ஏப்ரல் 8ம் தேதி தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
முத்துமாரியம்மன் கோவில் தல வரலாறு
ஒருமுறை இப்பகுதியில் வசித்து வரும் வணிகர் வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியின் பக்தரான அவருக்கு குழந்தைகள் கிடையாது. இவை வணிகத்திற்காக மதுரைக்கு வரும்போதெல்லாம் மீனாட்சி அம்மனிடம் தனது கவலையை எண்ணி புலம்புவார். மீனாட்சியும் இவரின் குறைகளை தீர்க்க விரும்பினாள் . ஒரு சமயம் இவர் மதுரை சென்று விட்டு ஊர் திரும்பும் வழியில் ஒரு சிறுமி தனியே நின்று அழுது கொண்டிருந்தாள்.
குழந்தையை கண்ட வணிகர் தனது கவலையை போக்கவே இக்குழந்தை கிடைத்தாக எண்ணி மகிழ்ந்தார். அவள் பெயரை கேட்டபோது முத்துமாரி என்று சொன்னாள். மீனாட்சியே குழந்தையாக தன்னிடம் வந்த்தாக எண்ணி சந்தோஷப்பட்டார். குழந்தையை தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்த சிறுமியை குளக்கரையில் அமரவைத்து விட்டு குளிப்பதற்காக சென்றிருந்தார். வந்து பார்த்தால் சிறுமியை காணவில்லை. இதனால் வருத்தம் கொண்ட வணிகர் நடந்ததை தன் மனைவியிடம் கூறினார்.
தங்களுக்கு கிடைத்த குழந்தையும் காணாமல் போனதை எண்ணி வருத்தத்துடன் இருவரும் சாப்பிடாமல் உறங்க சென்றனர். அன்றிரவில் கனவில் தோன்றிய அம்பிகை , தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும் கற்றாழை காட்டில் ஓரிடத்தில் தனது பாதச்சுவடு இருப்பதாக கூறினாள். அங்கு சென்ற வணிகர் பாத சுவடு இருந்த இடத்தில் ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து கோவில் கட்டினார். பிற்காலத்தில் இவளுக்கு சிலை வடித்து பெரியளவில் கட்டப்பட்டது.
முத்துமாரி என்று கூறியதால் முத்துமாரியம்மன் என்று அனைவராலும் போற்றப்பட்டார். கன்னித்தெய்வமாக இருப்பதால் திருமண வரம் வேண்டுவோர், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தல பெருமை
முத்துமாரியம்மன் நான்கு கரங்களில் உடுக்கை, சுத்தி, சூலம், அக்னி ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. சிறுமியாக வந்ததால் இவளை கன்னி தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். திருமண பாக்கியம் பெற தாலி பொட்டு செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபடுகிறார்கள். குழந்தை பாக்கியம் பெற வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின்பு கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருகின்றனர்.
கண் பிரச்சினை தீர்க்கும் அம்மன்
கண் நோய் உள்ளவர்களுக்கு இங்கு அம்மன் சன்னதியில் அபிஷேக தீர்த்தம் கொடுக்கின்றனர். கண்பிரச்சினை தீர்ந்தவுடன் கண்மலர் செலுத்தியோ அல்லது அங்கப்பிரதட்சனை செய்தோ தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருவிழாவை தொடர்ந்து பக்தர்கள் வசதிக்காக ஏப்ரல் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை தாயமங்கலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, கமுதி, காளையார்கோவில் , பார்த்திபனூர், இளையான்குடி, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.