கேதார்நாத் முதல் ராமேஸ்வரம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த 8 சிவ ஆலயங்கள்
மதுரை: இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து தென்கோடியில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் வரையிலும் உள்ள இடைப்பட்ட தூரம் சுமார் 2383 கிலோ மீட்டர்களாகும். இவ்வளவு தூரங்களுக்கு இடையில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் அனைத்துமே ஒரே நேர்கோட்டில் ஒரே தீர்க்க ரேகையில் துல்லியம் விலகாமல் அமைந்திருப்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இவை அனைத்துமே ஒரே நேர்கோட்டில் எப்படி அமையப்பெற்றது என்பது எல்லாம் வல்ல அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.
பொதுவாக, கோவில்கள் என்பது நம்முடைய உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. உச்சி முதல் பாதம் வரையிலான உறுப்புகளை உதாராணமாக வைத்து தான், கோவில்களிலும் கோபுர வாசல் முதல் கருவரை வரையிலும் கண கச்சிதமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
மற்ற மத வழிபாட்டு தலங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ இல்லையோ, இந்துக்களின் கோவில்களின், ஆகம விதிமுறைகளின் படியே கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
நம் முன்னோர்கள் அன்றைக்கு ஆகம விதிகள் வகுத்துள்ள விதிமுறைகளின் படியும், ஆன்மீக ஒழுக்க நெறிமுறைகளின் வழிகாட்டுதலின் படியும் கட்டிவைத்துவிட்டு போன எத்தனையோ கோவில்கள், இன்றைக்கு ஆராய்ச்சியாளர்களையும் தொல்பொருள் ஆய்வாளர்களையும், ஆச்சரியப்படுத்துவதோடு, அறிவியலின் உச்சமாகவும் பார்க்கப்படுகிறது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு, எந்தவிதமான அறிவியல் வளர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் மிகத் துல்லியமாக கோவில்களை நிர்மாணித்துள்ளதை நினைக்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது. சூரியன், பூமி மற்றும் ஒண்பது கோள்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் சுழற்சி முறையாக துல்லியமாக கணித்து அதற்கேற்ப கோவில்களையும் நிர்மானித்துள்ளது இந்தியர்களின் அறிவுக்கும் திறமைக்கும் சான்றாகவே பார்க்கப்படுகிறது.
அதற்கு உதாரணமாக பஞ்சபூத தலங்களும், அஷ்டலிங்க தரிசன கோவில்களான எட்டு சிவாலயங்களும் உள்ளன. இதில் இமயமலையில் உள்ள கேதார்நாத் கோவில் முதல் தென் கோடியில் உள்ள ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் வரை, எட்டு கோவில்களும் கொஞ்சம் கூட அட்சரம் பிசகாமல் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது தான், ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பூட்டுவதாக அமைந்துள்ளன.
அதிலும் இந்த எட்டு கோவில்களும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டது என்பததோடு, இந்த எட்டு கோவில்களின் கருவறை லிங்கங்களுமே கிழக்கு திசை பார்த்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது ஆச்சரியமான உண்மை.
இந்த எட்டு கோவில்களும் உருவாக்கப்பட்ட காலத்தில் எந்தவிமான செயற்கை கோள்களோ, திசைகாட்டும் கருவிகளோ கிடையாது. இருந்தாலும். புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை தேர்வு செய்து, ஜோதிடத்தின் துணை கொண்டு, மிகத் துல்லியமாக ஒரே தீர்க்க ரேகைக் கோட்டின் மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது தான் அதிசயத்தின் உச்சம்.
தனுசு ராசிக்கார ஹீரோவுக்கு எந்த ராசிக்கார ஹீரோயின் ஜோடி சேரணும் தெரியுமா
கேதார்நாத் சிவலிங்கம்
வடக்கில் இருந்து வருவோமானால், முதலில் வருவது இமயமலையில் உள்ள கேதார்நாத் கோவில். 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது ஆலயமாக பார்க்கப்படுவது இக்கோவில் தான். இக்கோவிலை கோடைகாலத்தின் துவக்கமான ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் மட்டுமே பத்கர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களை அனுமதிப்பதில்லை.
ராகு கேது பரிகார ஸ்தலம்
அடுத்ததாக வருவது, காலேஷ்வரா முக்தீஸ்வர சுவாமி கோவில். இக்கோவிலானது, தெலங்கானா மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவிலாகும். ஆந்திர மாநிலத்தின் சித்தூர் அமைந்துள்ள திருத்தலம் ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் கோவில். இந்த கோவில் பஞ்சபூத கோவில்களில் வாயு ஸ்தலமாகவும், ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு தான் சிவபெருமான், 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாருக்கு காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.
ப்ரித்வி ஸ்தலம்
அடுத்தது, தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கோவில் ஏகாம்பரேஸ்வரர் கோவில். பஞ்சபூத தலங்களில் ப்ரித்வி (நிலம்) தலமாக விளங்குகிறது. இக்கோவில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக மண்ணால் உருவானதாகும்.
நெருப்பு ஸ்தலம்
திருவண்ணாமலையில் அமைந்துள்ள நெருப்பு ஸ்தலமான அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு சிவன் நெருப்பு வடிவமாக வணங்கப்படுகிறார். இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு தலமாக இது விளங்குகிறது. ஏகப்பட்ட மகான்களும் சித்தர்களும் இன்றைக்கும் அரூபமாக வழிபட்டு வரும் தலமாகவும் விளங்குகிறது.
ஆகாய ஸ்தலம்
அடுத்ததாக, இருப்பது கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். இது பஞ்சபூத தலங்களிலேயே மிக முக்கியமான ஆகாய தலமாகும். சிவனடியார்களில் முக்கியமானவர்களாக விளங்கும் திருமூலர், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் போன்ற முனிவர்களால் வணங்கப்பட்ட தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் மூலவர் திருமூலநாதர் சுயம்பு வடிவாக தோன்றியவர். இக்கோவிலைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இக்கோவில் பஞ்ச பூத தலமாக இருப்பதோடு, பஞ்ச சபைகளில் ஒன்றான பொற்சபை தலமாகவும் உள்ளது. இக்கோவிலைப் பற்றிய மற்றொரு ஆச்சரியமான விஷயம், இக்கோவிலில் காட்சியளிக்கும் நடராஜ பெருமான், இன்றைய இயற்பியல் அறிஞர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் சொல்லும் பிரபஞ்ச நடனம் ஆடும் கோலத்தில் இருப்பதாகவும், இவருடைய கட்டை விரலின் அடியில் தான் இந்த பூமியின் மையப்புள்ளி இருப்பதாகவும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நீர் ஸ்தலம்
அடுத்ததாக அமைந்திருப்பது திருச்சிக்கு அருகில் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் கோவில். இது பஞ்ச பூத தலங்களில் அப்பு (நீர்) தலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள பெரிய சிவாலயங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற தலமாகவும் உள்ளது.
ராமநாதஸ்வாமி கோவில்
கடைசியாக இருப்பது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில். வடக்கிலுள்ள காசியைப் போன்றே இதுவும் ஒது புண்ணிய தலமாகும். இது 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும் உள்ளது. ராமாயண காலத்தில் உருவான மிகப்பழமையான தலமாகும். இராவணனை கொன்ற பாவம் தீர, ஸ்ரீராமர் இங்கு தான் மணலில் லிங்கத்தை உருவாக்கி வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். இதனாலேயே, இக்கோவில் முன்னோர்களுக்கு பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
ஒரே நேர்கோட்டில் சிவ ஆலயங்கள்
மேற்கண்ட எட்டு கோவில்களையும் எடுத்துக்கொண்டால், கேதார்நாத் கோவிலில் இருந்து ராமநாதசுவாமி கோவில் வரையிலும் உள்ள இடைப்பட்ட தூரம் சுமார் 2383 கிலோ மீட்டர்களாகும். இவ்வளவு தூரங்களுக்கு இடையில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் அனைத்துமே ஒரே நேர்கோட்டில் ஒரே தீர்க்க ரேகையில் துல்லியம் விலகாமல் அமைந்திருப்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இவை அனைத்துமே ஒரே நேர்கோட்டில் (79 டிகிரி தீர்க்க ரேகை) எப்படி அமையப்பெற்றது என்பது எல்லாம் வல்ல அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.