ஆனித் திருவிழா : நெல்லையப்பர் கோயில் கொடியேற்றம்! - 27ல் தேரோட்டம்
நெல்லையப்பர் கோவில் ஆனித் தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலின் முக்கியத்துவம் வாய்ந்த தேரோட்ட நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி அன்று நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனித் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்க உள்ளது. அத்துடன், கோயிலில் உள்ள கலையரங்கில் பக்தி கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நெல்லையப்பர் கோவில்
நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆனிப் பெரும் திருவிழாவையொட்டி கடந்த 1ஆம் தேதி விநாயகர் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நெல்லையப்பர் சந்நிதியில் உள்ள பெரிய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதையொட்டி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையில் சிறப்பு அபிஷேகத்துக்கு பின்பு காலை 6 முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. மாலையில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகின்றது.
வீதி உலா வரும் சுவாமி அம்பாள்
ஜூன் 20 காலை 8.30 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி-அம்பாளும், இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனர். 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா வருவர்.
தங்கச் சப்பரத்தில் வீதி உலா
22 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்வர். இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது. 26ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளி உள் பிரகாரத்தில் உலா வருதலும், மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்
ஒன்றாம் திருநாள் முதல் 7-ம் திருநாள் வரை தினமும் மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடச உபசார தீபாராதனை நடைபெறும். நெல்லையப்பர் கோயிலின் முக்கியத்துவம் வாய்ந்த தேரோட்ட நிகழ்ச்சி 9ஆம் நாளில் நடக்க உள்ளது. 27-ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட இருக்கிறது.
27ஆம் தேதி விடுமுறை
தேரோட்டத்தையொட்டி அன்று நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 27ஆம் தேதி புதன் கிழமையன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தேர்வுக்கு இடையூறு இல்லாமல், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக ஜூலை 14-ம் தேதி சனிக்கிழமை, அலுவலக வேலை நாளாகச் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.