சகட தோஷம் போக்கி நிலையான வாழ்வு தரும் கபாலி தேரோட்டம்!
சென்னை: இன்று பங்குனி பெருவிழாவை முன்னிட்டு சென்னை திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பல கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம்:
தேரோட்டம் என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலைகளையோ சிலையையோ சின்னங்களையோ இதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்துப் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்து வரும் ஒரு விழாவாகும் . இந்தியாவிலும், இலங்கையிலும இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது. கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்.
தத்துவம்:
கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்துச் சைவ நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இத் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது இந்நூல்களின் கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் அசுரர்களின் மூன்று நகரங்களை அழித்தான் என்னும் தொன்மக் கதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தேரின் சில்லிலிருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி மூன்று பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப்பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறைவன் காட்சிதரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் தமிழகத்தில் ஆண்டு தோறும் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜ கோபுர விமானத்தின் மறுவடிவம் போல அழகுறக்காட்சி தரும்
வேதத்தில் தேர்:
கடோபநிஷதத்தில் மனிதனின் உடலைத் தேராகவும் உயிரைத் தேர்த்தலைவனாகவும் புலன்களைக் குதிரைகளாகவும் புத்தியைத் தேர்ப்பாகனாகவும் புலன் சார் விடயங்களைத் தேரோடும் வீதியாகும் உவமித்திருக்கும் முற்றுருவகம் ஒன்றைக் காணலாம். இது போலவே கிரேக்க உரோம நாகரிகங்களிலும் தேர் சிறப்பிடம் பெறுவதை அவர்களின் இலக்கியங்களினூடே அவதானிக்க முடிகின்றது.
வேதத்தில் சிவபெருமானுக்குரிய ருத்ரம் எனப்படும் ஸ்ரீ ருத்ரத்தில்:
ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய: ரதபதிப்யச்ச வோநமோ நமோ:
அதாவது, "தேர்களாகவும் (ரதேப்ய:) தேர்வலவர்களாகவும் (ரதபதிப்யச்ச) உள்ள ஸ்ரீ பரமேஸ்வரனாகிய பகவானுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்," என்கிறது. இது சிவபெருமானுக்கும் தேருக்கும் உள்ள தொடர்பை விளக்குவதாக அமைந்துள்ளது.
கபாலித்தேர்:
பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் 'தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி', 'நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்றும் "கபாலி" "கபாலி" என்றும் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள்பாலித்தார்.
ஜோதிடத்தில் தேரோட்டம்:
ஜோதிடத்தில் சொகுசான வாகனங்களுக்கு காரகன் சுக்கிரன் ஆவார். தேரில் அலங்காரமும் சேர்ந்து இருப்பதால் சுக்கிரன் பொருத்தமானதாகும். சுக்கிரன் என்றாலே அழகு என்பதால்தான் "திருவாரூர் தேரழகு" என்கிறார்கள் போலும்.
சாதாரணமாக ராஜாகளும், ஆட்சி செய்பவர்பவர்களும் செல்லும் தேர் என்றால் சுக்கிரனோடு நிறுத்திவிடலாம். ஆனால் தெய்வதிருத்தேர் என்றால் மேலும் சில கிரகங்கள் காரகமாகின்றனர்.
உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரஙகள் குதிரையாகவும் ஏழுநாட்களை குறிப்பதாகவும் 12 மாதங்களை குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேருக்கு தெய்வீக தன்மையை தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மைய பகுதிக்கு குரு காரகன் ஆவார்.
கால புருஷ தத்துவபடி பேருந்து மற்றும் பேருந்து போன்ற பெரிய வாகனங்களுக்கான காரக வீடு மிதுனம் என்றும் காரக கிரகம் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிறு தூர பயணத்தை குறிப்பது காலபுருஷனுக்கு மூன்றாம் வீடான மிதுனம் என்றும் காரக கிரகம் சந்திரன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றது.
ஜோதிடத்தில் பன்னிரெண்டாம் வீடு அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என கூறப்படுகிறது. கால புருஷ தத்துவபடி மீன ராசி கால புருஷ ராசிக்கு பன்னிரெண்டாம் வீடாக அமைந்துள்ளது. அந்த இடத்தில் சூர்ய பகவானும் புதனும் இணைந்து கோசாரத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயனத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார்.
மேலும் பங்குனி மாத்தில் சந்திரன் மோட்ச காரகரான கேதுவின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் போது அமைந்த தேரோட்டம் அனைவருக்கும் மோட்சத்தை அளிக்கும் 'மோட்ச பிரயாணம்' ஆக அமைந்துள்ளது.
ஊர் கூடி தேர் இழுப்பது தேர் திருவிழா. பொது ஜெனம் என்றாலே சனைச்சரர் தான் காரகர். கபாலீஸ்வரரும் நவகிரஹங்களில் சனைச்சரரையே குறிப்பிடுகிறார். மேலும் தேர் மெதுவாக ஓடும் தன்மை கொண்டதால் சனியின் காரகம் பெறுகிறது.
சகட யோகம்:
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 - மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். சரி, இந்த "சகட யோகம்" என்பது என்ன செய்யும்?
இந்த யோகம் இருக்கிற ஜாதகர் உண்மையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த யோகமுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு நாள் பார்த்தால் நல்ல 5 ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். திடீரென்று கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள். கடுமையாக போராடும் குணமுடையவர்கள்.
ஒரு மாட்டு வண்டியிலுள்ள சக்கரத்தில் மேலே உள்ள ஒரு புள்ளி கண்டிப்பாக கீழே வந்தே ஆக வேண்டும், அதே போல கீழே வந்த புள்ளி மீண்டும் மேலே போயே தீர வேண்டும். இது சுழற்சி. இதையே யாரவது மாற்ற முடியுமா?
அது போல தான் இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும். பெரும்பாலும் இவர்களை வீழ்ந்து விட்டார்கள், இவர்கள் அவ்வளவு தான் என்று நினைக்கும் போது இவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பார்கள். அதே போல் சடார் என்று கீழேயும் வீழ்ந்து விடுவார்கள்.
தேரோட்டம் பார்தால் என்ன நன்மை?
தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும். இன்று கன்னியில் நிற்க்கும் குருவிற்க்கு 12ல் சந்திரன் நின்று சகட தோஷம் கொண்ட நாளில் கபாலீஸ்வரர் தேரோட்டம் பார்பவர் அனைவரும் நிலையான வாழ்வை பெற்றுவிடுவர்.
தேருக்கு அழிக்கும் தன்மை கொண்ட சனி காரகம் பெற்றிருப்பதால் நம்மிடம் இருக்கும் கன்மம், மலம், மாயை எனும் மும்மலங்களும் அழியும். சனி ஆயுள் காரகர் என்பதால் மரணத்தை அழித்து நீண்ட ஆயுளை தந்துவிடுவார்.
சூரியனும் புதனும் சேர்ந்து கால புருஷ அயன சயன போக மோட்ச ஸ்தானத்தில் இருப்பதால் பலரும் மோட்சத்தை பற்றிய சிந்தனை மற்றும் அறிவு வளரும்.