வீட்டில் குவா குவா சத்தம் கேட்கலயா? குரு பகவானை சரணடையுங்கள்
குரு பார்வைக்கு எண்ணற்ற பலன்கள் உள்ளன. ஒருவரின் ஜாதகத்தில் குரு பார்வை விழும் இடத்தைப் பொருத்து அந்த இடம் பலமடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குரு பார்வை பட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சென்னை: குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. தனம், புத்திரம் இந்த இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
கிரகங்களிலேயே சுப கிரகம் குரு. இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும்.
ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர்.
கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
'அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான். சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.
குரு பார்வை பலன்கள்:
ஒருவரின் சுய ஜாதகத்திலும் சரி, கோசாரப்படியும் சரி, குரு தன் பார்வையால் கிடைக்கும் நன்மைகள்.
குரு ஜன்ம ராசியை அல்லது லக்னத்தைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும். 2வது வீடான தன குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். 3ஆம் இடத்தை, தைரிய ஸ்தானத்தைப் பார்த்தால், எதிரிகளின் தொல்லை விலகும்.
நான்காம் வீடான இடத்தை, சுக ஸ்தானத்தைப் பார்க்கும்போது வீடு - மனை வாங்கும் யோகமும், வாகன பிராப்தியும் ஏற்படும்.
ஐந்தாம் இடத்தை, பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்குக் குருவருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி, அந்தச் சொத்து கைக்கு வரும். 6ஆம் இடத்தில், ருண ரோக ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, நீண்டகாலமாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் பூரண நலம் பெறுவர்.
களத்திர ஸ்தானமான 7வது வீட்டை குரு பார்க்க, பெற்றோர் ஆசிகளுடன் நல்ல மணவாழ்க்கை அமையும். அட்டம ஸ்தானமான ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும்போது, மரண பயம் நீங்கும்; விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம். 9ஆம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.
10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பதவியில் உயர்வும் நல்ல மாற்றமும் ஏற்படும். பெற்றோரின் உடல்நிலை சீராகும்.
11ஆம் இடத்தை, லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, சுப பலன்கள் ஏற்படும். பொருள் வரவு ஏற்படும். 12ஆம் வீடான சயன மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை பதியும்போது, ஆன்மிகத்தில் நஷ்டம் ஏற்படும். தெய்வ தரிசனமும் மகான்களின் அருளாசிகளும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் தரும் குரு பரிகார தலங்கள்:
ஜாதகத்தில் குரு பலமாக இல்லாவிட்டால் வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் 'குரு வார விரதம்’ ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். பிற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குரு பகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக் கடலை சுண்டல் வழங்கலாம். கும்பகோணம் அருகில் ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். அரசமர விநாயகரை அதிகாலை 5 மணிக்கு 48 முறை வலம் வரலாம். குருவாயூர் கண்ணனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளலாம் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருச்செந்தூர் சென்று முருகனை வியாழக்கிழமைகளில் வழிபடலாம்.