குருபெயர்ச்சி 2018: நாடாளும் யோகம் தரும் குருபகவான் #Gurupeyarchi
குருபெயர்ச்சி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவகிரகங்களில் குருபகவான் திருமணம், குழந்தை பாக்கியம், சிறந்த படிப்பு, யோகங்களை தரக்கூடியவர் என்பதால் அவரை வணங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்ற
சென்னை: ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத்துணை, கை நிறைய பணம், சொத்து சேர்க்கை, நன்னடத்தை, சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைப்பது ஒருவித யோகம்தான். இந்த யோகத்தை தருவது குருபகவான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. நாடாளும் யோகத்தையும் தருவார் குரு பகவான். குருபெயர்ச்சி நிகழ உள்ள நிலையில் குருவினால் ஏற்படும் பல யோகங்களை பார்ப்போம்.
நவ கிரகங்களில் முதன்மை பங்கு வகிப்பவராகவும் சுப கிரகமாகவும் திகழும் குரு பகவான், யோகங்களை கொடுப்பதிலும், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதிலும் முதன்மையான பங்கு வகிக்கிறார். குரு இருக்கும் இடத்தைப் பொருத்தும் கோள்கள் சேர்க்கை, பார்வை பொருத்தும் கெஜகேசரி யோகம், ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடையோகம் உள்ளிட்ட பல யோகங்கள் அமைகிறது.
ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.
நன்மை தரும் யோகம்
குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரமாகிய 4,7,10ல் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல உடலமைப்பு, நல்ல நடத்தை, நல்ல வருமானம், அமைச்சர் பதவி, மற்றவர்களால் மதிக்கப்படும் சிறப்பான நிலை, அழகும் அன்பும் கொண்ட வாழ்க்கைத்துணை ஆசியவை கிடைக்கும்.
வலிமையான யோகம்
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10 ஆகிய இடங்களில் குரு அமர்ந்திருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள், எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகிய பல உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகமும் ஏற்படும்.
கோடீஸ்வர யோகம்
குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ ஜென்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார். கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் குரு-கேது சேர்க்கைதான்.
வீடு கட்டும் யோகம்
ஒருவரின் குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
சிறந்த கல்வியாளர்
ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள். ஒருவரின் ஜாதகத்தில் குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.
திடீர் பணவரவு
ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை அல்லது ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் திடீர் பணவரவு பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் கிடைக்கும்.
குரு பகவானுக்கு விளக்கு போடுங்க
ஜாதகத்தில் குரு பகவான் சரியான இடத்தில் இல்லாதவர்கள், குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படுபவர்களுக்கு பரிகாரம் வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் குருபகவானுக்கு விளக்கு போடலாம். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையோடு இணைந்து வரும்பொழுதும் குரு ஓரையில் குருவை வழிபட்டு பரிகாரங்கள் செய்தால் அற்புதப் பலன்களைப் பெறலாம்.