அல்சீமர் என்னும் மறதி நோய்: புதன் பாதிக்கப்பட்டால் புத்தியும் பாதிக்கப்படும்
நோய்களுக்கும், கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புத்தி காரகன் புதன் பாதிக்கப்பட்டால் மூளை பாதிக்கப்படுவதோடு அல்சீமர் எனப்படும் மறதி நோய் ஏற்பட காரணமாகிறது.
சென்னை: அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிந்தது தெரியாமல் டிவி சீரியலில் ஆழ்ந்து விடுகிறார் அம்மா... ஒருமுறை , இருமுறை அல்ல பலமுறை இப்படி நடந்து விடுகிறது. சொல்ல வேண்டும் என்று நினைத்தது மறந்து விட்டது என்று அவ்வப்போது சோகத்துடன் சொல்கிறார் அம்மா. ஏன் இப்படி மறதி அடிக்கடி வருகிறது என்று யோசித்தால் இது அல்சீமரின் Alzheimer அறிகுறியாக இருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்தைக் காரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திநாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் செப்டம்பரை அல்ஜிமருக்கான மாதமாக அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான அல்சைமர் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ஆம் தேதி, உலக அல்சீமர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அல்சீமர் என்னும் மறதி நோய்
அல்சீமர் நோயானது 1906இல் அலாய்ஸ் அல்சீமர் என்பவரால் கண்டறியப்பட்டது. மூளையின் செரிபரல் கார்ட்டெக்ஸ் என்ற பகுதியில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான நோய் என்று கண்டறிந்தார். பெட் ஸ்கேன்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அல்ஜிமரைத் தெளிவாகக் கண்டறிந்தாலும் இன்னும் இந்த நோய் குறித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 46 மில்லியன் மக்கள் அல்சீமர் நோயால் அவதிப்படுகின்றனர். வரும் 2025இல் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்சீமர் குறித்த போதிய புரிதலோ, விழிப்புணர்வோ இன்றி பலரும் இந்த நோயை மனநோய் என்றே புரிந்து கொள்கின்றனர்.
உலக அளவில் அதிக மரணங்களுக்குக் காரணமாக இருக்கும் நோய்களில் அல்சீமருக்கு 6 வது இடம் உள்ளது. 65 வயதை தாண்டிய ஆண்களுக்கும் 70 வயது தாண்டிய பெண்களுக்கும் இப்பிரச்னை அதிகமாக வருகிறது. தனிமையும் மனச்சோர்வும் கூட மறதிக்கு காரணமாக அமைகிறது.
அல்சீமர் பாதிப்புகள் என்னென்ன
இடம், காலம், நேரம் எல்லாம் அவர்களுக்கு அடிக்கடி மறக்கும். வீட்டுக்குப் போகும் பாதையை கூட மறப்பார்கள். அல்சீமர் நோய் பாதித்தவர்களுக்கு மூளையின் நரம்புகள் தொடர்ந்து மோசமாகி வரும். அதனால் பகுத்து பார்த்தல், சிந்திப்பது, நினைவாற்றல், புரிந்துகொள்வது மற்றும் மொழி திறன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைந்து இறுதியில் என்ன செய்வது என்ற தெரியாத குழந்தை பருவ நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். அல்சீமர் உள்ளவர்கள் சமையலறையில் போய் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு மறதி உடையவர்களாக இருப்பார்கள்.
தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பவர்களுக்கு, அதிக மனச்சோர்வு உள்ளவர்களுக்கு, தலையில் கட்டி அல்லது காயம் உள்ளவர்களுக்கு, வைட்டமின் பி12 குறைவாக உள்ளவர்களுக்கு அல்சீமர் நோய் தாக்கக்கூடும். இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும். பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது.
அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையைத் தூண்டும் பயிற்சிகளான குறுக்கெழுத்து, வார்த்தை விளையாட்டு, பாடல்களை மனப்பாடம் செய்து எழுதுதல் போன்றவற்றை பயிற்சி செய்ய சொல்லலாம். கம்ப்யூட்டரை தினமும் பயன்படுத்தினால் மூளைக்குப் போதிய பயிற்சி கிடைக்கும்.
அல்சீமர் நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், மருந்துகள் மற்றும் முறையான அன்பான பராமரிப்பு மூலம் மோசமடைவதை தாமதப்படுத்தலாம். அல்சீமர் நோயாளிகளை யாரும் சுமையாகப் பார்க்க வேண்டாம். அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் முழு நேரம் செலவழிக்க முடியாவிட்டால் அதிக நேரம் ஒதுக்க முயற்சி செய்தால் போதும் மகிழ்ச்சியாலே மறதி நோயை மறக்கடிக்கலாம்.
ஜோதிட ரீதியாக அல்சீமர் நோய்
ஜோதிட ரீதியான நோய்களுக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உள்ளது. புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். கால புருஷனுக்கு லக்னமான மேஷமும் ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி ஆகிய கிரகங்களை கொண்டு மூளையின் தன்மையை அறியமுடியும். கால புருஷனுக்கு ஐந்தாம் வீடான சிம்மத்தின் அதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாவது மூளைக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பை கூறும்.
நரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். புதன் செவ்வாய் இணைந்து 6,8,12ல் அமர்ந்து இருந்தால் ஒய்வில்லாத நிலையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.
புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம். புதனுடன் சனி, செவ்வாய், கேது போன்ற கிரஹங்களின் சேர்க்கை பெற்று எந்த வீட்டில் நின்றாலும் மறதி நோய் ஏற்படும். புதன் மீனத்தில் நின்று நீச பங்கம் அடையாமல் அசுப கிரஹங்களின் தொடர்பு பெறுவது.லக்னத்தில் சனி ஆறாமதிபதி, நின்று அவற்றோடு புதனும் அசுப சந்திரனும் தொடர்பு பெறுவது. புதன் மறைவு ஸ்தானமான 6,8,12ஆம் அதிபதிகள் மற்றும் தேய்பிறை சந்திரன், செவ்வாய், சனி கேது ஆகிய கிரஹங்களுடன் சேர்ந்து ஐந்தாம் பாவத்தில் நிற்பது.
அல்சீமர் நீங்க பரிகாரம் என்ன?
புதனுக்குரிய பச்சைப்பயறு தினமும் சிறிதளவு ஊறவைத்து பச்சையாக சாப்பிடுதல், பச்சை வெண்டைக்காய், பச்சையாக முட்டைகோஸ் சிறிதளவு, உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லிக்காய் ஒன்று என தினமும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு பலகீனமாக இருப்பவர்கள் வலிமை அடைவார்கள். புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தானியம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும்.
புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பரிகாரமாகும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வணங்கலாம். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.