இறைவனுக்கு ஆகாத ஐந்து தீட்டுக்கள்: காமம், கோபம், சுயநலம், கர்வம், பொறாமை
சென்னை: தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் உள்ளன. இறைவன் இருக்கும் இடத்தில் சில தீட்டுகள் ஆகாது. அந்த தீட்டுக்களுடன் இறைவனை நெருங்க முடியாது. காமம், கோபம், சுயநலம், கர்வம், பொறாமை ஆகிய ஐந்தும்தான் இறைவனுக்கு ஆகாத தீட்டுக்கள்.
தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். காமம்,
குரோதம், லோபம்,மதம்,மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். குரோதம் என்பது கோபம். லோபம் என்பது சுயநலம். மதம் என்பது கர்வம். மாற்சரியம் என்பது பொறாமை. இந்த ஐந்தும் இறைவனுக்கு ஆகாது. இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.
ஆசைக்கு அடிமை ஆகாதே
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார்கள். காமம் என்பது ஆசைதான். எதன்மீதாவது ஆசை வைத்தால் அதன் நினைவாகவே இருப்போம். நம்முடைய நினைவு பூராவும் அந்த பொருள் மீதே இருக்கும். அதை அடைவதற்காக மட்டுமே சதா முயற்சி செய்வோம். அந்த பொருள் கிடைத்து விட்டால் கொண்டடுவோம். சந்தோஷப்படுவோம் இல்லாவிட்டால் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சும் எனவேதான் இறைவனுக்கு இந்த தீட்டு ஆகாது என்றார்கள். ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள் பெரியவர்கள்.
கோபத்திற்கு அடிமை ஆகாதே
கோபம் ஒருவித வெறியை ஏற்படுத்தும் கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடுதான் உட்காருவான். கோபம் வந்து விட்டால் புத்தியில் எதுவும் ஏறாது. எனவேதான் கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்றார்கள். கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர். கோபத்தால் ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இறைவனுக்கு ஆகாத இரண்டாவது தீட்டு.
சுயநலம்
சிலர் தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள் தனக்காக மட்டுமே யோசிப்பார்கள். பிறரைப்பற்றி சிந்திக்காமல் இறக்கம் இல்லாமல் சுயநலத்துடன் பொருட்களை சேர்த்து வைப்பார்கள். கஞ்சத்தனத்துடன் இருப்பார்கள். அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். அவர்களை இறைவனுக்கு பிடிக்காது. எனவேதான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றார்கள். இதுதான் மூன்றாவது தீட்டு
ஆணவத்தீட்டு
மதம் என்பது கர்வம் அதாவது ஆணவம் ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது இது. எதையும் தன்னால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ வெறியால் அனைவரையும் துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவார்கள். கர்வத்தோடு இருப்பவர்கள் இறைவனைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்று கூறினர். ஆணவம் கர்வமே நான்காவது தீட்டு.
பொறமை தீட்டு
பொறாமை என்பது தீ. ஐயோ அவங்க அப்படி இருக்காங்களே... இப்படி இருக்காங்களே என்று பொறாமையால் வெந்து சாவார்கள். பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவார்கள். நொந்து நொந்து சாவார்கள். பிறரது கஷ்டத்திற்காக ஏங்குவார்கள். எப்பொழுது செத்துப் போவார்கள் என்று வேண்டுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே என்றார்கள் இதுதான் ஐந்தாவது தீட்டு. இந்த ஐந்து தீட்டுக்களையும் விலக்கு இருப்பவர்கள் இறைவனை அடையலாம். அவர்களே இறை வடிவமாக மாறுவார்கள்.