திருச்செந்தூர் போறீங்களா... மறக்காம பன்னீர் இலை விபூதி பிரசாதம் வாங்கிட்டு வாங்க
திருச்செந்தூரில் ரூ.250 கட்டண தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மற்றும் இலை விபூதி அடங்கிய பிரசாத பை வழங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி அளித்து உள்ள
சென்னை: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதம், தனித்துவமும் மகிமையும் வாய்ந்தது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது. சூரசம்ஹாரம் முடிந்த உடன் தேவர்களே பன்னீர் மரங்களாக மாறி செந்தூரில் அருள்பாலிப்பதாக புராண கதைகள் சொல்கின்றன. திருச்செந்தூரில் ரூ.250 கட்டண தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மற்றும் இலை விபூதி அடங்கிய பிரசாத பை வழங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி அளித்து உள்ளார்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. மாசி திருவிழா, ஆவணி திருவிழா, கந்த சஷ்ட திருவிழா பிரசித்தி பெற்றது. விழா நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், இலவச தரிசன வரிசை உள்ளது. மேலும் ரூ.20, ரூ.100, ரூ.250 ஆகிய கட்டண தரிசன வரிசைகளும் தனித்தனியாக உள்ளன. ரூ.100, ரூ.250 கட்டண தரிசன வரிசைகளில் செல்லும் பக்தர்கள், கோவில் மகா மண்டபத்தில் இருந்து ஒன்றாக சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து ரூ.250 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு லட்டு மற்றும் இலை விபூதி பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சூர சம்ஹாரம்
சூரபத்மனுடன் போரில் வென்று மயிலாகவும், சேவலாகவும் தன்னுடன் வைத்துக்கொண்டவர் முருகப்பெருமான். திருச்செந்தூர் திருத்தலம் ஜெயந்திபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத் தலத்தில் தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. கடற்கரையில் அசுரர்களை வதம் செய்த பின்னர் முருகப் பெருமான் திருச்செந்தூரில் ஜெயந்திநாதராக, சுப்ரமணியராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முருகனின் பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின என்கிறது புராணம்.
தங்கமாக மாறிய விபூதி
பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
விபூதி பிரசாதம்
சூரபத்மனை வதம் செய்து முடிந்த பின் போய் காயங்கள் ஆறவேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
என்னென்ன நோய்கள் தீரும்
தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இலை விபூதி பிரசாதத்தை திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இனி மறக்காம கேட்டு வாங்கிட்டு வாங்க.