மகா சிவராத்திரி: அக்னியாய் வெளிப்பட்ட அண்ணாமலையாரை சிவராத்திரியில் கிரிவலம் வந்து தரிசிங்க
சிவராத்திரி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதன் மூலம் நமது பாவங்கள் கரைந்து காணாமல் போகும் அதன் மூலம் மூன்றாண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் செல்வ வணங்கள் வந்து சேரும்.
திருவண்ணாமலை: மகாசிவராத்திரி விழா திருவண்ணாமைலையில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை தீப விழாவைப் போலவே மகா சிவராத்திரி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், அக்னி தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரியில் இருந்து ஆரம்பித்து தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரிகள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் இதில் இடைவெளி விழுந்துவிடக் கூடாது. அதுவும் சிவராத்திரி இரவில் நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு, மறுநாள் அதிகாலையில் 5.20 முதல் 6.20க்குள் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் அதன் பிறகே,சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்.
சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வருவதன் மூலம் இதுவரையிலும் நாம் எடுத்த அத்தனை மனிதப் பிறவியிலும் நாம் செய்த அத்தனை பாவங்களும், நமது கர்ம வினைகளும் கரைந்து காணாமல் போய்விடும். அப்படி கரைந்து காணாமல் போவதால்,அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான வேண்டுகிற வளங்கள் நம்மை வந்து சேரும்.
மகாசிவராத்திரி விரதம்
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மட்டும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள்.
திருவண்ணாமலை தரிசனம்
அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவர் வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.
லிங்கோத்பவராக மாறிய சிவன்
சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர். திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.
ஆணவம் அகந்தை மறையும்
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.
லிங்கோத்பவர் பூஜை
மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, மோட்ச பிரதாயினி என்று சொல்கிறார்கள்.
சிவனுக்கு தாழம்பூ
லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெந்நீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
மகாசிவராத்திரி தீப தரிசனம்
மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
கிரிவலம் மகிமை
கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும்.
சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும்.