காரைக்கால் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி ஜோதி தரிசனம் வரை இனி 5 நாட்கள்
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழா இந்த ஆண்டு முதல் 5 நாட்கள் நடைபெறும். ஜூலை 13 மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி ஜூலை 17 ஜோதி தரிசனம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்: மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி 'மாங்கனி திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாங்கனி திருவிழா ஜூலை 13ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் மாங்கனித்திருவிழா 5 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மே 3ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியுள்ளது. காரைக்காலம்மையாரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசம் கோயில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் பந்தக்காலில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதை தொடர்ந்து பந்தக்கால் நடப்பட்டு மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
சிவபெருமானை போற்றி வணங்கிய 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட புகழ் பெற்றவருமான புனிதவதியார் எனும் ஸ்ரீகாரைக்காலம்மையாரின் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு மாங்கனி திருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் அறங்காவலர் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிவபெருமானின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமை காரைக்கால் அம்மையாருக்கு உண்டு. இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவை காண ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
பக்தர்களின் வசதிக்காகவும், விழாவில் சிவாச்சாரியார்களின் இடைவிடா பணிச் சுமையைக் குறைக்கவும், கடந்த ஆண்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத்துறை அதிகாரிகள், சமாதானக்குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் கலந்துகொண்ட கூட்டத்தில், 4 நாள் விழாவை 5 நாளாக நீடிப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற உபயதாரர்கள் கூட்டத்திலும் அதே கருத்து முன்வைக்கப்பட்டது. உபயதாரர்களும் ஆட்சேபனை இன்றி விழாவை 5 நாட்கள் நடத்தலாம் என்று ஒப்புகொண்டனர். தொடர்ந்து, வேத சிவகாம விதிகள் கற்றுத்தேர்ந்த சிவாச்சாரியார்களின் பூரண ஒப்புதலுடன், விழாவினை கூடுதலாக ஒருநாள் நீடிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு விழா வருகிற ஜூலை 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், 15ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் நடக்கிறது. 16ஆம் தேதி காலை 6 மணிக்கு பிச்சாண்டவர் வீதிஉலா, பக்தர்கள் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சியும், 17ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.