விநாயகர் சதுர்த்தி 2019: முழுமுதற்கடவுள் விநாயகரை வணங்கினால் என்னென்ன நன்மை தெரியுமா?
Recommended Video
சென்னை: முப்பது முக்கோடி தேவர்களுக்கும், முப்பெரும் தெய்வங்களுக்கும் முதன்மையானவர் விநாயகப் பெருமான். ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்டவராக அவர் இருப்பதால்தான் எந்த செயலை தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபடுவது முதன்மையானது. எழுதும்போது கூட பிள்ளையார் சுழி போட்டோ எழுதத் தொடங்குகிறோம்.
'வி' என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. விநாயகரின் பானை போன்ற வயிறு பிரம்மனின் அம்சமாகவும், அவரது முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடது பாகம் பார்வதியின் அம்சமாகவும், வலதுபாகம் சூரியனின் அம்சமாகவும் மூன்று கண்கள் ஈஸ்வரனின் அம்சமாகவும் விளக்குகிறது. எனவேதான் முழுமுதற்கடவுளாக விநாயகரை வழிபடுகின்றோம்.
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவை.
பிள்ளையார் பிறந்த கதை
சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். தேவ மைந்தன் அவதாரம் செய்வதற்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த சிவபெருமான் அதற்கான வேலைகளை தொடங்கினார்.
சந்தனத்தில் உருவான பிள்ளை
பார்வதிக்கு அழகான பிள்ளை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அதற்காக ஒரு படத்தை உருவமாக வரைந்தாள். ஆனால் அந்த படம் கை தவறி தும்பிக்கையுடன் கூடிய பிள்ளையாக மாறியது. எல்லாம் நன்மைக்கே என்று பார்வதியிடம் கூறினார் சிவன். தனக்கு காவலாக இருந்த நந்தி சிவனுக்கு விசுவாசமாக இருந்ததால் தனக்காக ஒரு பிள்ளையை மஞ்சளை பிடித்து வைத்து உருவாக்கி உயிர் கொடுத்தார் பார்வதி. அந்த பிள்ளை சிவபெருமானையே வீட்டிற்கு வர விடவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவன் அந்த பிள்ளையின் தலையை வெட்டினார்.
யானை முகம் கொண்ட பிள்ளை
மகனின் தலை வெட்டப்பட்டது கண்டு கதறிய பார்வதி தனது கணவர் சிவன் மீது கோபம் கொண்டார். பிள்ளையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டவே, சிவபெருமான் ஆணைப்படி வடக்குப் பக்கம் சென்றனர். அங்கே முதலில் தென்பட்டது யானைதான். அதன் தலையை எடுத்து வந்து வெட்டுப்பட்ட குழந்தையின் தலையோடு ஒட்டவைத்தனர். இது நடந்தது ஆவணி மாத சதுர்த்தி. பார்வதி படமாக வரைந்தது நிஜத்தில் உண்மையானது. யானை முகத்தோடும், மனித உடலோடும் இருந்த விநாயகரை அசுரன் கஜமுகாசுரனை வதம் செய்ய அனுப்பி வைத்தார் சிவபெருமான்.
கஜமுகாசூரன் வதம்
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார். அசுரனோ, மூஞ்சூறாக வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார். பின்னர் அவர் மூஞ்சூறையே தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும்.
யுகங்கள் தோறும் விநாயகர்
விநாயகர் கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சூறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து காரியங்களுக்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங்குகின்றது. அவரை `பஞ்சகிருத்திகள்' என்றும் கூறுவர்.
சிவ சக்தியின் இணைப்பு பிள்ளையார்
எந்த செயலை செய்யத் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி எழுதப்படுகிறது. பிள்ளையார் சுழி ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து 'உ' என்று எழுதுவார்கள். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, வட்டத்தை `0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டினை நாதம் என்றும் கொள்கின்றனர்.
எனவே பிள்ளையார் சுழியை `நாதபிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக கூறப்படுகின்றது.