துளசியின் மகிமை: ஏழை வியாபாரியை தீண்ட வந்த நாகம்... தப்பிய உயிர்
சென்னை: புரட்டாசி மாதம் புனிதமான மாதம். இந்த மாதத்தில் புனிதமான துளசியை தீர்த்தமாக பெருமாள் கோவில்களில் தருவார்கள். இந்த துளசி தீர்த்தம் பல்வேறு மகிமைகளைக் கொண்டது. துளசி பெருமாளுக்கு உகந்தது. பலகோடி மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்தாலும் துளசி இலையால் பெருமாளை அர்ச்சனை செய்தால் அதற்கான மகிமையே தனிதான். துளசி இலை மருத்துவ குணம் கொண்டது. துளசியைப் பற்றி இந்த புரட்டாசி மாதத்தில் அறிந்து கொள்ளலாம். ஏழை கீரை வியாபாரிக்கு பாம்பினால் ஏற்பட்ட ஆபத்து ஒன்று துளசியால் நீங்கியது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.
ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குள் சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிசையில் முனிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையை வைத்து பூஜை செய்வதை பார்த்து கொண்டே போவார்.
ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதை பார்த்துவிட்டு காட்டுக்குள் சென்றார். கீரை வகைகளை பறிக்கும் போது அதன் அருகே துளசி இலையும் வளர்ந்திருப்பதை கண்டார். அப்போது அவருக்கு முனிவர் பூஜை செய்யும் துளசி இலை ஞாபகம் வந்தது.
நாமும் அந்த முனிவரை போன்று ஒரு மனிதன் தானே. இதுவரை என்றாவது பெருமாளுக்கு பூஜை செய்திருக்கிறோமா. நம்மால் பூஜை தான் செய்ய முடியவில்லை. இந்த துளசியையாவது பறித்து கொண்டு முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாக கொடுப்போமே என்று துளசியையும் சேர்த்து பறித்து கீரை கட்டோடு போட்டு தலை மீது வைத்து முனிவரின் குடில் நோக்கி வந்தார்.
அவர் பறித்து போட்ட கீரை கட்டில் ஒரு சிறு கருநாகம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை. முனிவரின் குடில் முனிவர் முன் வந்து நின்றான் ஏழை. முனிவர் ஏழையை பார்த்தார். அவன் பின்னே அருவுருவமாய் யாரோ ஒருவர் நிற்பதை கண்டார். பின் தன் ஞான-திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று கண்களை மூடினார்.
ஏழையின் பின்னே நிழல் போல் கிரகங்களில் ஒருவரான ராகு பகவான் நின்றிருந்தார். முனிவர் ஏழையிடம் அப்பா. உன் தலையில் உள்ள கீரை கட்டை அப்படியே வைத்திரு ஒரு ஐந்து நிமிடம் அதை கீழே இறக்க வேண்டாம். இதோ வந்து விடுகிறேன் என்று கூறி குடிலின் பின் பக்கம் சென்று ஒரு மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார்.
ராகு பகவானும் முனிவர் முன்னே வந்து நின்று வணங்கி ஸ்வாமி என்னை தாங்கள் அழைத்த காரணம் என்ன என்று கேட்டான். முனிவரும் ராகு பகவானை வணங்கி ராகவனே எதற்காக இந்த ஏழையை பின் தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா? என்றார்.
அதற்கு ராகு பகவான் ஸ்வாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாகம் உருவம் எடுத்து இவனை தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி. ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று திருமால் விரும்பும் துளசியை இவன் சுமந்ததால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன். இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனை தீண்டி விட்டு என் கடமையை முடித்து கொண்டு நான் கிளம்பி சென்று விடுவேன் என்றார்.
துறவிக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது. எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியை பறித்து கொண்டு வந்துள்ளான். அவனை காப்பற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணி ராகு பகவானே அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்றார். ராகுபகவான், ஸ்வாமி இத்தனை காலம் நீங்கள் பெருமாளுக்கு பூஜை செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் அவனது தோஷம் நீங்க பெற்று நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் என்றார்.
முனிவர் மகிழ்ந்து அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு செய்த பூஜையின் பலனையெல்லாம் அந்த ஏழைக்கு தாரை வார்த்து தருகிறேன் என்று கூறி ஏழைக்கு தன் பூஜையின் பலனை தாரை வார்த்து கொடுத்தார். ராகு பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார். கீரை கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது.
முனிவர் ஏழையிடம் ஒரு கட்டளையிட்டார். அப்பா இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா என்றார். ஏழைக்கு மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே இல்லம் நோக்கி சென்றான். என் கருத்து வைகுண்ட வாசன் ஹரி நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே. பக்தியோடு எதை கொடுத்தாலும் பரவசமாய் அவன் ஏற்பான்.