சனியினால் ஏற்படும் சங்கடங்களைப் போக்கும் கால பைரவர் - 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய முறை
நவகிரகங்களும், 12 ராசிகளும் பைரவரின் உடம்பில் அடக்கம் என்பதால் அவரை எந்த ராசிக்காரர்கள் நட்சத்திரகாரர்கள் பைரவரை எப்படி வணங்க வேண்டும் என்ற முறை உள்ளது.
மதுரை: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம். தேய்பிறை அஷ்டமி நாளான இன்று எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பைரவரை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீபகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. நாளைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகத்துடன் பஞ்ச திரவியாபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடைபெறுகிறது.
தடைகள் நீங்கும்
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும்.
சொர்ண பைரவர்
தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
செவ்வரளி மாலை
21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் தேய்பிறை அஷ்டமியான இன்றைய நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் பக்தர்கள் பைரவருக்கு ஏற்றி வணங்குகின்றனர்.
27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர்கள்
அஸ்வினி - ஸ்ரீ ஞான பைரவர், பரணி - ஸ்ரீமகா பைரவர், கார்த்திகை - ஸ்ரீ சொர்ண பைரவர், ரோகிணி - ஸ்ரீகால பைரவர், மிருகசீரிஷம் - ஸ்ரீ சேத்திரபால பைரவர், திருவாதிரை - ஸ்ரீவடுக பைரவர், புனர்பூசம் - ஸ்ரீவிஜய பைரவர் பூசம் - ஸ்ரீ ஆவின் பைரவர், ஆயில்யம் - ஸ்ரீ பாதாள பைரவர், மகம் - ஸ்ரீநர்த்தன பைரவர், பூரம் - ஸ்ரீ கோட்டை பைரவர், உத்திரம் - ஸ்ரீ ஜடாமண்டல பைரவர், அஸ்தம் - ஸ்ரீ யோக பைரவர்,சித்திரை - ஸ்ரீ சக்கர பைரவர், சுவாதி - ஸ்ரீ ஜடா முனி பைரவர், விசாகம் - ஸ்ரீ கோட்டை பைரவர், அனுஷம் - ஸ்ரீ சொர்ண பைரவர், கேட்டை - ஸ்ரீகதாயுத பைரவர், மூலம் - ஸ்ரீ சட்டநாதர் பைரவர், பூராடம் - ஸ்ரீகால பைரவர், உத்திராடம் - ஸ்ரீவடுகநாதர் பைரவர், திருவோணம் - ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர், அவிட்டம் - சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் உள்ள அஷ்ட பைரவர் சந்நிதி. சதயம் - ஸ்ரீசர்ப்ப பைரவர், பூரட்டாதி - கோட்டை பைரவர். உத்திரட்டாதி - ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர், ரேவதி - ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்.
12 ராசிகளும் பைரவரும்
பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. மேஷ ராசிக்காரர்கள் இவர் தலையினைப் பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கணுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
பைரவ அஷ்டமி
ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
பைரவருக்கு படையல்
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.
பைரவர் மந்திரம்
சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை மந்திரம் கூறி பூஜிக்க ஆயுஷ் யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும்.