தேய்பிறை அஷ்டமி - தன்வந்திரி பீடத்தில் 74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 08.04.2018 ஞாயிறன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை நடைபெற்றது.
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்வர்ண கால பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் மஹாபைரவருக்கு யாகமும், அபிஷேகமும், செவ்வரளி பூக்களால் அர்ச்சனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
சகல உலகங்களையும் அதில் அமைந்துள்ள, ஆலயங்களையும், தீர்த்தங்களையும் காவல் புரிபவர் ஸ்ரீ பைரவர் ஆவார் ஷேத்திரங்களைக் காவல் புரிவதால் அவர் ஷேத்ரபாலகர் கடல் முதலான பெரிய நீர்ப்பகுதிகள் பொங்கி பூமியை அழித்தி விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால் தீர்த்த பாலகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
காக்கும் கடவுள் பைரவர்
மக்களிடம் அறிவு சுடரை வளர்ப்பதால் ஞான பைரவர் என்றும், யோகங்களை அள்ளித்தருவதால் யோகபைரவர் என்றும், யோகிகளுக்கு காவலாக இருப்பதோடு மகா வீரர்களிடம் உக்ர பைரவராகவும், பஞ்ச பூதங்களினால் உண்டாகும் சீற்றங்களில் இருந்து காக்கும் பூத பைரவராகவும் இன்னும் பல்வேறு வடிவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
சனிதோஷம் நீங்கும்
சனீஸ்வர பகவானின் குருவாகவும் விளங்குகிறார். பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டு சனி, ஜென்மச்சனி, அர்த்தஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபட்டால் எல்லா சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
64 பைரவ யாகம்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 08.04.2018 ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை க்ருஷ்ண பக்ஷ தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா பைரவருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும் மற்றும் 64 பைரவருக்கும் 64 குண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற்றது.
மகா யாகம்
இதனை தொடர்ந்து ஸ்ரீ சக்ரத்தில் நித்யவாசம் செய்யும் பராம்பிகையைச் சுற்றி வீற்றிருக்கும் 64 யோகினிகளுக்கு சிறப்பு பூஜைகள் சென்னை சாக்த ஸ்ரீ பரணிகுமார் அவர்கள் நிகழ்த்தினார். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களுக்கும், 64 பைரவர் 64 யோகினிகள் பூஜை கணபதிபூஜை, குரு மண்டல பூஜை, 64 பைரவர் சகித 64 யோகினிகள் என தொடர்ந்து 64 விளக்குகள் ஏற்றி தீபாராதனையுடன் நடைபெற்றது.
பைரவர் அபிஷேகம்
இதனை தொடர்ந்து ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவருக்கும், அஷ்ட பைரவ சகித மஹா கால பைரவருக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்கிற ஸ்ரீ கங்கோத்ரி ஸ்வாமிகள், சத்குரு மாதா அன்னபூரணி, அடிஅண்ணாமலை மாதா புவனேஸ்வரி, காஞ்சீபுரம் லளிதாம்பிகா பீடம் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ பாலானந்த ஸ்வாமிகள், அடயார் பாலாபீடம் ஸ்ரீ கணேசன் ஸ்வாமிகள், ஆத்ரேய கோத்திரம் பைரவ ரமணி, மற்றும் அம்பாள் உபாசகர் ஸ்ரீ சங்கரநாராயணன் சென்னை அவர்கள் பங்கேற்றனர்.
நெல்லிபொடி அபிஷேகம்.
மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் வருகிற 12.04.2018 வியாழக் கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடி கொண்டு மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம்
நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுக்கலாம்.