தேய்பிறை பஞ்சமி: நோய்கள் நீங்க எதிரிகள் ஒழிய வாராஹி தேவியை வழிபடுங்க
பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள்.
சென்னை: மனிதர்கள் நோய் பயமின்றியும் எதிரிகள் தொல்லையின்றியும், வம்பு வழக்குகள் எதுவும் இன்றி வாழ்வதே வசந்தம்தான். வராஹி அன்னையை வழிபடுபவர்களுக்கு நோய், எதிரி, கடன், வம்பு வழக்குகள் பிரச்சினை எதுவும் இருக்காது. இன்று தேய்பிறை பஞ்சமி திதி புதன்கிழமை வருவது சிறப்பு. இந்த நாளில் வாராஹி தேவியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும் விரோதிகள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத ஆபத்துகளும், விபத்துக்களும் விலகி ஓடும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் குணமாகும். செய்வினை கோளாறுகள் நீங்கும் அன்னை ஆதிபராசக்தியின் அருள் கிடைக்கும்.
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அன்னை வாராஹி. அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது. பௌர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும். பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம். இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வாராஹியை நினைத்து வழிபடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர். தேன் கலந்த மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை அன்னைக்கு பிடித்தமானது.
வாராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வாராஹி. நோய் தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய்கள் பரவாமல் இருக்க இரவு நேரத்தில் வராஹி தேவியை வழிபடலாம்.
கொரோனா வைரஸ் சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை சரணடைவோம்
எதிரிகள் தொல்லை நீங்கும்
வராஹம் எனப்படுவது பன்றியின் அம்சமாகும் விஷ்ணுவின் அவதாரங்களில் இதுவும் ஒன்றாகும். அன்னை வராஹி பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
வராஹியை வழிபடுகிறவர்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்படும். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, நினைத்தது நிறைவேறும்.
வழக்குகள் நீங்கும்
மிருகசக்தியும்,தேவகுணமும் கொண்ட வாரஹி பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். உலகை அழிவில் இருந்து மீட்டவளாகக் கருதப்படுகிறாள். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு வருபவள் வாரஹி எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
வெள்ளை மொச்சை
வாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும்.
கருப்பு உளுந்த வடை
வாராஹிதேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம்.
கேட்ட வரம் கிடைக்கும்
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இந்த மத்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.
புதன்கிழமை வாராஹி வழிபாடு
ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.