ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை - ஜோதிடப்படி எந்த கிரகங்கள் பாதிப்பு?
ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம் என்று அறியலாம்.
மதுரை: தற்கொலை மரணங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகமாக ஏற்படுகின்றன. உலகளவில் தற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்வதாகவும், இளம் வயதினரே தற்கொலை முடிவை எடுப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
'தற்கொலை நிகழ்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்' என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதி சர்வதேச தற்கொலை விழிப்பு உணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் முதலில் அது குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தற்கொலை விழிப்பு உணர்வு தினத்துக்காக தற்கொலைகளைத் தடுக்க ஒன்றிணைவோம்” எனும் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
தற்கொலை முடிவுகள்
தற்கொலையைத் தூண்டக் கூடியவை எவை என்பதற்கு உளவியல் நிபுணர்கள் நான்கு காரணங்களை முன்வைக்கிறார்கள். முதலாவது, பொதுநலம் சார்ந்த விஷயங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்களின் போதும், அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க மறுக்கும்போதும் இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்கின்றன.
கிழக்காசிய நாடுகளில் ஒரு லட்சம் பேரில் ஐந்துக்கும் குறைவானவர்களே தற்கொலை மூலம் மரணிக்கிறார்கள். இந்தியா போன்ற வளரும் நாட்டில் இது மிகப்பெரிய அவலம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இளம் வயதில் தற்கொலை
ஏழை அல்லது பணக்காரன் அவ்வளவு ஏன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 முதல் 29 வயது நிரம்பிய இளைய பருவத்தினரே அதிகம்.
கிராமங்களில் தற்கொலைகள்
தற்கொலை செய்பவர்களில் இருபது சதவிகிதம் பேர் விஷம் குடித்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இது வருமானம் குறைந்த அல்லது ஓரளவு வருமானம் பெருகிய நாடுகளில் கிராமப் புறங்களில் தான் அதிக அளவில் நடைபெறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக தூக்குபோட்டும், தீக்குளித்தும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
மது போதை அடிமைகள்
பணக்கார நாடுகளில் மனநலம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம், மது போதை மற்றும் போதை மருந்து உள்ளிட்டவைகளால் தற்கொலைகள் நடைபெறுகின்றன. மனதூண்டுதல் மற்றும் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பல தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க மது மற்றும் போதை மருந்து குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்பவர்களின் எண்ணத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எந்த ராசிக்காரர்கள் தற்கொலை
ஜோதிட ரீதியாக எந்த ராசிக்காரர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று வெளிநாட்டு ஜோதிடர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி மகரம், கன்னி ஆகிய ராசிக்காரர்களும், விருச்சிகம், மீனம், கடகம் ராசிக்காரர்களும் அதிக எண்ணத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர். மீனம் ராசிக்காரர்கள் அதிக அளவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றனர். அதே முறையைத்தான் விருச்சிக ராசிக்காரர்களும் விரும்புகின்றனராம். தனுசு ராசிக்காரர்களும், ரிஷப ராசிக்காரர்களும் விஷ வாயுவை பயன்படுத்தி தற்கொலை செய்ய நினைக்கிறார்களார். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு கன்னி ராசிக்காரர்கள் தள்ளப்படுகின்றனராம்.
தற்கொலைக்கு கிரகங்கள்
தற்கொலைக்கு காரணமாக கிரகங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் ஒன்றாம் இடம் எனப்படும் லக்னாதிபதி மனோ பலத்தை கொடுக்கக் கூடியவர், தடைக்கற்களை படிக்கல்லாக மாற்றும் திறமையுடையவர், வெற்றியை தரக்கூடியவர். லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆம் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.
ஆயுள் ஸ்தானம் எப்படி?
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆயுள் ஸ்தானமாகும். 8ல் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களை நஷ்டங்களை ஏற்படுத்தும், எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொண்டால் அட்டமாதிபதியாக உள்ள கிரகத்தால் தாக்கம் வராது. லக்னத்துக்கு 8ல் செவ்வாய் வந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும். புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும். சுக்கிரன் வந்தால் கோழை மனதோடு,தற்கொலைக்குத் தூண்டும்.
மனோ தைரியம்
ஜோதிடவியலில் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பர். ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது. லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும்.
ராகுவின் நிழல் பாதிப்பு
சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கௌரவக் குறைபாடு ஏற்படுகிறது. அதோடு சந்திரன், ராகுவோடு செவ்வாயின் தாக்கம் சேரும்போது கோபம், புதனின் தாக்கத்தினால் இயலாமை, குருவின் தாக்கத்தினால் ஆற்றாமை, சுக்கிரனின் தாக்கத்தினால் வெறி, சனியின் தாக்கத்தினால் பயம், கேதுவின் தாக்கத்தினால் விரக்தி ஆகிய எண்ணங்கள் தற்கொலையைத் தூண்டும்.
நன்மை தரும் சூரியன்
லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோளும் வலிமை இழக்கும் பட்சத்தில்தான் இதுபோன்ற தீய எண்ணங்கள் மனதில் உருவெடுக்கும். சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு. அதிகாலைச் சூரியனின் ஒளிக்கற்றைகளுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும்.