மார்கழி 2019: திருச்செந்தூர்,காளஹஸ்தி கோவில்களில் அதிகாலை 3.30 மணி முதல் பூஜை ஆரம்பம்
மதுரை: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள காளஹஸ்தி கோவிலிலும், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் வழக்கமாக நடைபெறும் பூஜை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காளஹஸ்தி மற்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் மார்கழி மாதம் முழுவதும் கோவில் நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்கழி 1ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரையிலும், அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை காட்டப்பட்டு, பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.
மேலும், ஆங்கில வருடப்பிறப்பான ஜனவரி 1ஆம் தேதி மற்றும் ஜனவரி 15ஆம் தேதியன்று தை பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வருப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
அதே போல், ஜனவரி 10ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு, அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளஹஸ்தி கோவில் பூஜை நேரம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். பஞ்சபூத கோவில்களில் காற்று தலமாக உள்ளது. அதோடு ராகு-கேது பரிகார தலமாகவும் உள்ளது. இங்கு தினசரி பூஜை நேரங்களானது அதிகாலை 4.30 மணி முதல் ஆரம்பமாவது வழக்கமாகும். ஆனால், இக்கோவில் சிவாலயம் என்பதோடு புகழ்பெற்ற பஞ்சபூத தலம் என்பதால், மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடுவது காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறை. எனவே, மார்கழி மாதத்தில் மட்டும் வழக்கமாக நடைபெறும் பூஜை நேரங்களில் சிறிது மாற்றம் செய்யப்படும்.
அதே போல் இந்த ஆண்டும் மார்கழி மாத பூஜை நேரத்தை மாற்றி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தினசரி அதிகாலை 3.30 மணிக்கு முதல் மணியோசை, அதிகாலை 4 மணிக்கு மங்கள வாத்தியம், அதிகாலை 4.15 மணிக்கு திருமஞ்சனம், முதல் கால அபிஷேக பூஜை, காலை 6 மணிக்கு இரண்டாம் கால அபிஷேக பூஜை, காலை 7 மணிக்கு பரிவார தேவதைகளுக்கு நிவேதனம், காலை 7.30 மணிக்கு கொப்பி தேவதை மாடவீதி புறப்பாடு, காலை 10.30 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகமும் நடைபெறும்.
இதில், மூன்றாம் கால அபிஷேகம் மற்றும் பிரதோஷ கால அபிஷேகத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். அதோடு ஞாயிறு, திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் பள்ளியறை பூஜை இரவு 9 மணிக்கும், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பள்ளியறை பூஜை இரவு 8.30 மணிக்கும் நடைபெறும். இந்த மாற்றம் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.