திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்
முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
திருச்செந்தூர்: அரசுரர்களை அழிக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தெறித்த அக்னியில் அவதரித்தவர் ஆறுமுகன். தமிழ்கடவுள் முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் நிவர்த்தியானது. எனவேதான் முருகனின் அறுபடை வீடு தலங்களில் திருச்செந்தூர் தலம் தனித்துவமும் கொண்டதாக திகழ்கிறது.
முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.
மூலவர்கள், உற்சவர்கள்
திருச்செந்தூரில் சுப்ரமணியர், சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்ரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
சூரசம்ஹாரம்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ந்தாலும் அது நடக்க வித்தாக உருவானது சிக்கலில் தான். மேலும் "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்ற சொல் வழக்கும் உண்டு. சக்தி வேலின் வீரியத்தின் காரணமாக, சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சியை இன்றளவும் காணலாம்.
சூரபத்மன்
முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.
திருக்கல்யாணம்
சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7ஆம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.
நாழிக்கிணறு
திருச்செந்தூர் கோவிலில் அருகில் நாழிக்கிணறு எனப்படும் தீர்த்தக்கிணறு உள்ளது. இங்கு உள்ள தண்ணீர் நல்ல தண்ணீர் என்பது அதிசயமாகும். இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
பஞ்சலிங்கம்
மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. அந்த சுரங்க அறையின் உள்ளே சென்றால் முருகன் வழிபட்ட பஞ்சலிங்கங்களைக் தரிசிக்கலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.
குழந்தை பாக்கியம்
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூரில் ஒரு தினம் உபவாச விரதம் இருப்பவர்களுக்கு அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.