காசிக்கு போக முடியலையே என்ற கவலையா? பங்குனி அஸ்வினியில் திருக்கடையூர் போங்க
மயிலாடுதுறை: திருக்கடையூர் மயான கிணறு பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடம் ஒரு முறை வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர். இந்த வருடம் வரும் 27 - 3 - 2020, பங்குனி 14, வெள்ளிக்கிழமை புண்ணிய நாளில் பக்தர்கள் அனைவரும் திருக்கடையூர் மயான கிணறு பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராடி புண்ணியம் பெறுங்கள்
சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் காஞ்சீபுரம், காழி மயானம் சீர்காழி, நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் ஆகும். மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம்.
தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயீர் வழங்க வேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயத்தின் ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது.
இந்த தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இருக்கும் நீரைக்கொண்டு, 16 வயதுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து சிவபூஜை செய்வதற்காக, திருக்கடவூர் மயான கிணற்றில் கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு.
தற்போதும், திருக்கடையூர் அமிர்த்தகடேஸ்வர சுவாமிக்கு காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்தாலும் அபிஷேகம் கிடையாது. இந்த புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன் திருக்கடையூர் மயான பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த போது திருக்கடவூர் மயான பிரம்மபுரீஸ்வர சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது. ஆகையால் திருக்கடவூர் மயானம் ஈசனுக்கு கூட இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் கிடையாது.
காசி சென்று கங்கையில் நீராட வாய்ப்பில்லையே என்று வருந்தும் மக்களுக்காக பங்குனி அஸ்வினி நட்சத்திர திருநாளில் மட்டுமே பக்தர்கள் நீராட அருளும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரின் கருணை. மற்ற நாட்களில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுவாமியின் அபிஷேகத்திற்க்கு மட்டுமே இந்த புனித நீர் எடுக்கப்படும்.
திருக்கடையூர் மயான கிணறு பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடம் ஒரு முறை வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர். இந்த வருடம் வரும் 27 - 3 - 2020, பங்குனி 14, வெள்ளிக்கிழமை புண்ணிய நாளில் பக்தர்கள் அனைவரும் திருக்கடையூர் மயான கிணறு பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராடி புண்ணியம் பெறுங்கள்.