புரட்டாசி சனி: திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமியநாராயணபெருமாள் திருக்கோயில்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்
சென்னை: திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகபோற்றப்படுகிறது. இத்தலம் பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடப் பெற்றது. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான இன்று பல்வேறு சிறப்புகள் நிறைந்த திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமியநாராயணபெருமாள் திருக்கோயில் பற்றி அறிந்து கொள்வோம்.
ஹிரண்யவதம் நிகழும் பொருட்டு அசுரன் உட்புகாத கதம்ப மகரிஷியின் ஆசிரம பகுதியில் தேவரும் மூவரும் கோஷ்டியாக அசுர வதத்திற்கு இயைந்த அவதாரம் இறைவன் மேற்கொள்ள ஆலோசித்த திவ்யதேசம் இதுவாகும்.
இத்திருத்தலம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்ததின்படி பரமபதம், அந்தர்யாமித்துவம், வியூக அவதாரம், விபவ அவதாரம் ஆகிய திருமேனிகளை அர்ச்சை திருமேனிகளாகக் கொண்டு கூத்தாடியும், கிடந்தும், நின்றும், இருந்தும் அஷ்டாங்க திவ்ய விமானத்தில் சிறந்து விளங்குகிறது .
கருவறையில் கதம்பமுனி, காசிராஜன், மதுகைடபர், இந்திரன் ஆகியோர்களுடன் பெருமாள் காட்சி தருகிறார்.
விஸ்வகர்மா நிர்ணயித்த ஆலயம்
இத்திருக்கோயில் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விஸ்வகர்மா தலைமையில் தேவ, அசுர தச்சர்களால் நிர்மாணிக்கப்பட்டது. இக்கோயில் 64 சதுர்யுகங்களைக் கண்டது. பூலோகம், திருப்பாற்கடல், சத்திய லோகம், வைகுண்டம் ஆகியவற்றை இந்த ஒரு கோயிலிலேயே தரிசிக்க முடிகிறது என்பது பரவசமான விஷயம்.
தரைத் தளத்தில் ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி சமேத ஸ்ரீசௌமியநாராயணர் பாம்பணையில் சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார். அதற்கு மேல் தளத்தில் அருள்மிகு உபயநாச்சியார்களுடன் உபேந்திரநாராயணர் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் அதற்கு மேலே உபயநாச்சியார்களுடன் பரமபதநாதர் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலில் மூலவர், உற்சவர், திருமஞ்சமூர்த்தி, நித்ய உற்சவர், யாகமூர்த்தி என ஐந்து மூர்த்திகளாக பெருமாள் காட்சியளிக்கிறார். சௌமிய நாராயணப் பெருமாள், கதம்ப மகரிஷிக்கு அருள் செய்வதற்காக இத்திருத்தலத்தில் தோன்றியுள்ளார். கோயில் பிராகாரத்தில் கதம்ப மகரிஷிக்கு அருள் செய்யும் கோலம் அமைக்கப்பட்டுள்ளது. திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என இங்கே கொலுவீற்றிருக்கும் தாயார் அழைக்கப்படுகிறார்.
அரசுரனை அழிக்க கோஷ்டி
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அசுரனை அழிப்பதற்காக கோஷ்டியாக இணைந்து திட்டமிட்ட ஊர் திருக்கோஷ்டியூர். சொந்த மகன் பிரகலாதனையே தன் கொள்கைக்கு விரோதமாக நடந்துகொள்கிறான் என்பதற்காக இரண்யனை சித்திரவதை செய்யவும் துணிந்த அந்த அரக்கனை வதம் செய்வதற்காக அம்மூவரும் கூடிப்பேசி புதியதோர் அவதாரத்தை உருவாக்கினார்கள். அந்த அவதாரம்தான் நரசிம்மர். பெருமாள் நரசிங்க அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்வது போன்றும், இரணியனுடன் மல்யுத்தம் செய்வது போன்றும் உள்ள சிலை தனிச் சிறப்புடையது. கோயிலின் அஷ்டாங்க விமானம், அஷ்டாட்சர மந்திரத்தை கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார் சௌமிய நாராயண பெருமாளை 'வண்ண மாடங்கள் சூழ் திருகோஷ்டியூர் கண்ணன்' எனப் பாடியுள்ளார். இப்பாடல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாடலாக விளங்குகிறது. ஆண்டாள் இத்திருத்தலத்தில் கண்ணனையே ஆயர்பாடிக் கண்ணனாக தான் கோபியராக இந்த ஊரே ஆயர்பாடியாக பாடி பரவிய தலம். பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, ராமர் அளித்த பரிசாக இந்த பள்ளிக்கொண்ட பெருமாளை விபீஷணன் சந்தோஷத்துடன் எடுத்துச் சென்றான். ஆனால், இப்பகுதிக்கு வந்த அவன் சற்றே இளைப்பாறும் பொருட்டு, நிலத்தில் சிலையை வைக்க, இறைவன் இங்கேயே நிலைத்துவிட்டார்.
ராமானுஜர் உபதேசம்
ஸ்ரீராமானுஜர் உலகத்தை உய்விக்கும் திருமந்திரத்தை உபதேசம் பெறுவதற்காக திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தில் பதினெட்டுமுறை வருகை தந்து ஓம்நமோநாராயாணாய என்ற திருமந்திரத்தை உபதேசம் பெறுகிறார். இந்த மந்திரத்தை வேறு எவருக்கும் கூறினால் தலை வெடித்துவிடும் நீவிர் நரகத்திற்கு செல்வீர் என ஸ்ரீராமானுஜரை திருக்கச்சி நம்பிகள் எச்சரிக்கிறார். மனித இனம் மேன்மை அடைவதற்காக தன் தலை வெடித்தாலும் பரவாயில்லை என்று இத்திருக்கோயிலின் உயர்ந்த கோபுரத்தில் நின்று இத்திருமந்திரத்தை மக்கள் அனைவருக்கும் உபதேசம் செய்தார். இதனையறிந்த நம்பிகள் கோபமுடன் ராமானுஜரை நோக்கி வந்த போது, ராமானுஜர், 'அடியேன் நரகத்திற்கு போவதற்கு அஞ்சவில்லை. ஆனால், இத்தனை மக்கள் சொர்க்கத்துக்குப் போக முடியுமென்றால் இதைவிட பெரிய சமுதாயத் தொண்டு நான் எதைச் செய்யமுடியும்?' என்று கேட்டார். குருவும் அவரை ஆரத் தழுவிக்கொண்டார். 'எம்பெருமானார்' எனப் பட்டமும் சூட்டினார். இச்சம்பவம் கோயில் விமானத்தின் மேல் சிற்பமாக உள்ளது.
மகாமகம்
12 ஆண்டிற்கு ஒரு முறை மகாமகம் நடைபெறும். கும்பகோணத்தில் பெரிய மகாமகக் குளம்; இங்கே, மகாமக கிணறு! 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கங்கை இந்தக் கிணற்றுக்கு வருவதாக ஐதீகம். இப்படி கங்கை சேரும் நீரில் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.
மாசிமகம், பெரிய தெப்பத் திருவிழாவாக இரவில் கொண்டாடப்படுகிறது. பெருமாளும், தேவியும் உற்சவராக தங்க பல்லக்கில் காட்சியளிப்பார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குளக்கரையில் விளக்கு ஏற்றுவார்கள்.
விளக்கு நேர்த்திக்கடன்
இந்த ஆலயத்தில் விளக்குப் பரிகாரம் பிரபலமானது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, விளக்கு ஒன்றை வீட்டிற்கு எடுத்துப்போய் பூஜை செய்கிறார்கள். ஒரு சிறிய டப்பாவில் வைக்கப்பட்டிருக்கும் இந்த விளக்கை பூஜை அறையில் வைத்து, தினமும் 108 முறை 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும். கல்யாணம், கல்வி, செல்வம், புத்திர பாக்கியம், வியாபாரம் போன்றவற்றில் உள்ள தடைகள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறியபின், அவரவர் சக்திக்கு ஏற்ப விளக்குகளை வாங்கி கோயிலில் வைக்க வேண்டும்.
எப்படி செல்வது
நான்காம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் மானியங்கள், கிராம தானங்கள் நந்தா விளக்கு எரிய நன்கொடைகள் செய்த நிலை காணப்படுகிறது. இந்த ஆலயம் திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில் திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.