திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: மாட வீதிகளில் உலா வரும் மலையப்பசாமி - பக்தர்களுக்கு அனுமதி!
திருப்பதியில் வரும் 16ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மாடவீதிகளில் உலா வரும் மலையப்பசாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. நவராத்திரி பிரம்மோற்சவ காலத்தில் மாட வீதிகளில் மலையப்பசாமி வீதி உலா வருவார் எனவும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை அடுத்து கடந்த மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வராமல் ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்றது.
ஆன்லைனில் புக் செய்து வந்தவர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்வு திருக்குளத்தில் நடைபெறாமல் தொட்டியில் உள்ள நீரீல் நடைபெற்றது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 25ஆம் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது.
முதல்வர் பதவி போட்டியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட ஓபிஎஸ்! 'உறுதி செய்த' அமைச்சர்கள் பேட்டி
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெறும் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம், சமூகஇடைவெளி, கையுறை போன்றவை கட்டாயமாக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதியில் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே நவராத்திரி பிரமோற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கல்யாண உற்சவம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.