திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா - சாமி தரிசனம் செய்ய கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால்: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
திருநள்ளாறில் உள்ள உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் நாளை 27ஆம் தேதி காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் 48 நாட்களுக்கு சனிபகவானை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் கோவிலுக்கு வந்து அதிகாலை 3.30 மணி முதல், சமூக இடைவெளி, முககவசத்துடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அங்குள்ள நளன் தீர்த்த குளத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே நாளை சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருநாள்ளாறுக்கு வந்து கொண்டுள்ளனர். இதனிடையே திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழாவில், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ள பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
திருநள்ளாறில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என்றும், ஒரே நேரத்தில் 200 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினால் திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதன் பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாத பக்தர்களை காவல்துறையினரே திருப்பி அனுப்பி வருவதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.