திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவம்: தேரோட்டம் கோலாகலம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் கோலகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிந்த முழக்கத்துடன் திருத் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை: கோவிந்தா... கோவிந்தா முழக்கத்துடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மகா விஷ்ணுவின் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பிரம்மோற்சவ விழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் தேவியருடன் சிறப்பு அலங்காரங்களுடன் நேற்று அதிகாலையில் திருத்தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து, கோயிலை சுற்றியுள்ள தென்மாட வீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு உள்ளிட்ட தெருக்களில் திருத்தேர் வலம் வந்தது.
ஏராளமான பக்தர்கள் குளத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் எழுந்தருளிருந்த பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
நாளை இரவு 10 மணிக்கு சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.