திருவண்ணாமலை தீபத்திருவிழா: தேரோட்டம் சுவாமி வீதி உலாவுக்கு தடை கூடாது-பக்தர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தேரோட்டம் மற்றும் சுவாமி திருவீதி உலா வைபவமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட பக்தர்கள் மனவேதனை அட
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, சுவாமி தோரோட்டமும் வீதியுலா வைபவமும் நடத்த தடை விதிக்கக்கூடாது என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்சமயம் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய் தொற்று பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வழக்கம் போல் தேரோட்ட மற்றும் சுவாமி திருவீதியுலா வைபவம் நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவபெருமானில் பஞ்சபூத திருத்தலங்களில் நெருப்பு (தேயு தலம்) கோவிலாக உள்ளது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில். தமிழ்நாட்டிலுள்ள சிவாலயங்களிலேயே மிகவும் பழமையான கோவிலாகவும், மலையே சிவமாகவும் விளங்கும் இத்திருத்தலத்தை சுற்றியும் மலையை சுற்றியும் எண்ணற்ற சித்தர்கள் அரூபமாக வலம் வருவதாக ஐதீகம். இதனால் தான் நாள் கிழமை பார்க்காமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.
இக்கோவிலில் நாள்தோறும் திருவிழா என்றாலும், கார்த்தைகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தான் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் நாளில் மட்டும் சுமார் இருபது லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வரும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வும், தொடர்ந்து மறுநாள் தேரோட்ட வைபவமும் நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பரவிய கொரோனோ நோய் தொற்றால், அனைத்து கோவில்களும் மூடப்பட்டன முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்த நிலையில், கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த மாதம் முதல் மதவழிபாட்டு தலங்களை திறக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் வழிபடவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரும்பாலான கோவில்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்பு சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள சில கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் அனுமதி பெற்று சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பருவமழை தீவிரமடைந்து வருவதாலும் மீண்டும் கொரோனா நோய் தொற்றின் தாக்கும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தேரோட்டம் மற்றும் சுவாமி திருவீதி உலா வைபவமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா பல்லாண்டுகளாக தங்குதடையின்றி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்துவது தெய்வகுற்றமாகும். ஆகவே, தீபத்திருவிழாவின்போது, சுவாமி தோரோட்டமும் வீதியுலா வைபவமும் நடத்த தடை விதிக்கக்கூடாது. தற்சமயம் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய் தொற்று பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வழக்கம் போல் தேரோட்டம் மற்றும் சுவாமி திருவீதியுலா வைபவம் நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து தீபத்திருவிழா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.