திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - பக்தர்கள் கோவிலுக்கு வரவும் கிரிவலம் செல்லவும் தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் சிவபெருமான நினைத்து வணங்கி வருகின்றனர்.
பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஞாயிறன்று கோவிலின் உள்ளே பக்தர்கள், பொதுமக்கள் சாமி செய்ய அனுமதி இல்லை. அதனால் வீட்டில் இருந்த படி விழா நிகழ்வுகளை பக்தர்கள் காண தொலைக்காட்சி, யூடியுப், கோவில் இணைய தளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மகா தீபம்
கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஞாயிறுகிழமை மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.
காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர்
இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
கோவிலுக்குள் வர தடை
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முழுவதும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்று முதல் மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கிரிவலம் வர தடை
கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மதியம் 1.17 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை மதியம் 2.23 மணிக்கு நிறைவு பெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மலை ஏற அனுமதி இல்லை
தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பட உள்ளதால் பக்தர்கள் தங்களின் வீட்டில் இருந்த படி விழா நிகழ்வுகளை தொலைக்காட்சி, அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலை மீது ஏறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலை மீது ஏற உள்ள 16 வழிதடங்களிலும் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
டிசம்பர் 3ல் விழா நிறைவு
30ஆம் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், 1ஆம் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், 2ஆம் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. வழக்கமாக தெப்பல் உற்சவ நிகழ்ச்சிகள் அய்யங்குளத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.