திருவண்ணாமலையில் உத்தராயண பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் - அரோகரா முழக்கமிட்ட பக்தர்கள்
திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சாமிதரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை: சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு கார்த்திகை மாத தீப திருவிழாவிற்கு அடுத்து உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் தட்சணாயன புண்ணியகாலம், உத்தராயண புண்ணியகாலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திலும், கொடியேற்றவிழா நடைபெறுவது வழக்கம்.
உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று அண்ணாமலையார் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம்
அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றவிழா நடைபெற்றது. கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கூடி அரோகரா முழக்கமிட்டு சாமிதரிசனம் செய்தனர்.
அருள்பாலித்த இறைவன்
அப்போது சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10 நாள்கள் நடைபெறும் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை ஆகிய வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தை முதல் நாள் தீர்த்தவாரி
உத்தராயண புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு மார்கழி மாத இறுதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. 10ம் நாளான தை மாதம் முதல் தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி விழாவுடன் நிறைவு பெறவுள்ளது.
விண்ணை எட்டிய அரோகரா
கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக தீபத்திருவிழா கொடியேற்றமும், தீபத்திருவிழாவும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் உத்தராயண பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.