ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு திருவாதிரை களி படைப்பது ஏன் தெரியுமா?
ஆருத்ரா தரிசன நாளில் திருவாதிரை செய்து ஆடல்வல்லான் நடராஜருக்கு நைவேத்தியம் செய்வார்கள். மார்கழி திருவாதிரை நாளில் களி படைப்பது ஏன் என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
மதுரை: திருவாதிரைக்கு ஒருவாய் களி என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. திருவாதிரை விரதம் இருந்து, 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, களி சமைத்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் பக்தர்கள். ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு களி சமைத்து நிவேதனம் செய்யப்படுவதற்கு ஒரு சுவையான கதை ஒன்று உள்ளது. பக்தன் சமைத்து கொடுத்த களியை இறைவனே சுவையாக உண்ட சம்பவமும் சிதம்பரத்தில் நடந்துள்ளது.
களி என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.
சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் சாப்பிடுவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் சோதனையாக யாரும் அன்று வரவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார். உடனே மகிழ்ச்சியடைந்த சேந்தனார் சமைத்த களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் சாப்பிட்டதோடு மிச்சமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்த போது நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் இருந்தன. உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார்.
கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
சிவனைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
இதைப்பார்த்த அரசனும் அமைச்சர்களும் சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் விழுந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் திருஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்று கூறுவதோடு களி சமைத்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் பக்தர்கள்.
திருவாதிரை களி வீட்டிலேயே செய்ய டிப்ஸ் இதோ:
தேவையானவை :
பச்சரிசி அரிசி - ஒரு கப்,
மண்டை வெல்லம் - ஒன்றரை கப்,
தண்ணீர் - இரண்டரை கப்,
பாசிப்பருப்பு, வெள்ளை உளுந்து - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
துருவிய தேங்காய் - ஒரு கப்
முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.
செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தப்பருப்பை தனித்தனியாக நன்றாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
அரிசியை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதிகம் மாவு போல வேண்டாம். அதே போல வறுத்த உளுந்தையும் அரைத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும் 2 விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். பிறகு மீண்டும் நன்றாக கொதிக்கவிடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கும் வெல்லப்பாகில் அரைத்து வைத்த அரிசி மாவு, உளுந்த மாவு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு நன்றாகக் கிளறவும். அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவேண்டும் அடி பிடிக்க விடக்கூடாது.
இந்த கலவை வெந்த உடன், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும். ஆடல் அரசன் நடராஜருக்கு படைத்த பின்னர் பிரசாதம் சாப்பிட அல்வா போல திருவாதிரைக்களி சுவையாக இருக்கும்.