தொ.பரமசிவன் பார்வையில் மதுரை மீனாட்சி பட்டாபிஷேகமும் திருக்கல்யாணமும்
புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட திருவிழாவாக இது இருந்தாலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் திராவிட நாகரிகத்தில் பெண்களும் முடிசூடி
மதுரை: சித்திரைத் திருவிழாவில் மீனாட்சித் தெய்வம் திருமணத்திற்கு முன் பட்டாபிஷேகம் செய்யப்பெற்று செங்கோல் ஏந்தி மதுரை நகரத்து வீதிகளில் திக்குவிசயம் செய்கிறது. திருமணம் நடந்த பின்னரும் சுந்தரேசர் இராணியின் கணவராகவே கருதப்படுகிறார். இந்திய வரலாற்றில் எந்தப் பெண் தெய்வமும் இப்படியொரு தனிச் சிறப்பைப் பெற்றதில்லை என்று மறைந்த எழுத்தாளரும் பண்பாட்டு ஆய்வாளருமான தொ. பரமசிவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மனோன்மணியம் பல்கலைக்கழத்தின் முன்னாள் தமிழ் துறைத் தலைவரும், பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவன் உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். அவருக்கு வயது 70. அவருடைய மறைவு தமிழ்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று அரசியல் தலைவர்களும் தமிழ்துறை தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அழகர்கோவில் குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
அவருடைய அறியப்படாத தமிழகம் புத்தகம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. பண்பாட்டு அசைவுகள் சமயங்களின் அரசியல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். குல தெய்வ வழிபாடு குறித்து அவர் எழுதிய புத்தகம் சிறப்பு வாய்ந்தது.
அவர் தன்னுடைய முக நூல் பக்கத்தில் மதுரை சித்திரை திருவிழா பற்றியும் மீனாட்சி திருக்கல்யாணம் பற்றியும் பதிவு செய்துள்ளார். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறாத நிலையிலும் மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் கோவிலுக்குள் நடைபெற்றது.
மதுரைக்கு மட்டுமே சிறப்பான இந்த தெய்வீக திருக்கல்யாணம் பற்றி பதிவு செய்துள்ளார் தொ. பரமசிவன்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=2718358195065849&id=1562027757365571
தமிழ் இலக்கியம் காலந்தோறும் தவறாது பாடும் நகரம் மதுரையாகும். இலக்கியங்கள் பாடும் பழையாறை, பூம்புகார், போன்ற பழைய நகரங்கள் அழிந்து போயின. தஞ்சை, கருவூர்,(கரூர்) ,காஞ்சி போன்ற நகரங்கள் சிதைந்து அளவில் சுருங்கிப் போயின. மதுரை நகரம் மட்டும் சித்திரத்துப் பூப்போல வாடாமல் இருக்கிறது.
அரசர்களாலும் பக்தர்களாலும் இலக்கியங்களாலும் கொண்டாப்பட்ட நகரங்களுள் மதுரையும் ஒன்று.இத்தோடு எளிய மக்களின் நாவில் அன்றாடம் ஒலிக்கின்ற தாலாட்டு,ஒப்பாரி, ஆட்டப்பாடல்கள்,பழமொழி,விடுகதை, கதைகள்,ஆகியவற்றிலும் தவறாது பேசப்படும் நகரம் மதுரையாகும். இந்தப் பெருமை தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்குக் கிடைத்ததில்லை.
நகரத்தின் தலைமைத் தெய்வமான மீனாட்சி மதுரைக்கு அரசி என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை. இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சித் தெய்வம் திருமணத்திற்க்கு முன் பட்டாபிஷேகம் செய்யப்பெற்று செங்கோல் ஏந்தி மதுரை நகரத்து வீதிகளில் திக்குவிசயம் செய்கிறது. திருமணம் நடந்த பின்னரும் சுந்தரேசர் இராணியின் கணவராகவே கருதப்படுகிறார். அரசராகக் கருதப்படுவதில்லை.
இந்திய வரலாற்றில் எந்தப் பெண் தெய்வமும் இப்படியொரு தனிச் சிறப்பைப் பெற்றதில்லை. புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட திருவிழாவாக இது இருந்தாலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் திராவிட நாகரிகத்தில் பெண்களும் முடிசூடி ஆண்ட நிகழ்வினையே இது நமக்கு நினைப்பூட்டுகிறது என்று பதிவிட்டுள்ளார் தொ.பரமசிவன்.