ஆடிப்பூரம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது.
இத்தகைய பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருஆடிப்பூர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும்.
11ஆம் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் அருள்பாலித்தார். இந்த திருக்கோலத்தை தரிசித்தால், தம்பதியரிடையே ஒற்றுமை வலுப்படும் என்பது ஐதீகம்!. 8ஆம் திருநாளான நேற்று மதுரை அழகர்கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்பட்ட பரிவட்டங்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7.20 மணிக்கு தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது. ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் நாள் நாளை மாலை 5 மணிக்கு இரட்டைத்தோளுக்கினியானில் ஆண்டாள்-ரங்கமன்னார் புறப்பாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் அவதாரம் பட்டர்களால் வாசிக்கப்படும். இதனைத் தொடர்ந்து மறுநாள் ஆண்டாள் - ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்ப யாகத்துடன் விழா நிறைவடைகிறது.
திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை, குழந்தைபேறு தடை உள்ளவர்கள் ஆடிப்பூரம் தினமான இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு அனைத்து பாக்கியங்களும் உடனே கிடைக்கும்.