திருமலை ஏழுமலையான் கோவில் மகா கும்பாபிஷேகம் - கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம்
திருப்பதி மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்திருந்தனர்.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு குறைவான அளவே அனுமதி இருந்தாலும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். கோவிந்தா முழக்கத்துடன் கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.
ஏழுமலையான் கோவில் என்றாலே எங்கும் கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவதால் கடந்த 5 நாட்களாகவே திருமலை மாட வீதிகள் வெறிச்சோடியே காணப்பட்டன. கோவில் உண்டியல் வருமானமும் குறைந்து விட்டது. இன்று ஏழுமலையான் தரிசனம் கிடைக்காது என்றாலும் கோபுர தரிசனத்தை காணவே பக்தர்கள் குவிந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழாவிற்கான பணிகள் கடந்த 11ஆம் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 12ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்றைய தினமே மூலவர் ஏழுமலையான் மற்றும் இதர சன்னதி தெய்வங்கள், உற்வச மூர்த்திகளின் ஜீவ சக்தி கலசங்களில் மாற்றி யாகசாலையில் நேற்று வரை வைத்து அர்ச்சகர்கள் யாகம் செய்தனர்.
வெங்கடாசலபதிக்கு கும்பாபிஷேகம்
மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியின் 4வது நாள் நிகழ்ச்சிகளாக நேற்று யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன. காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை மூலவர் வெங்கடாஜலபதி, வகுளமாதா தேவி, விமான வெங்கடேஸ்வரர், வரதராஜசாமி, கருடாழ்வார், யோகநரசிம்மர், பாஷிங்கார் மற்றும் பேடி ஆஞ்சநேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கலச ஸ்நாபன திருமஞ்சனம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றன.
கோபுர கலசங்களுக்கு அபிஷேகம்
யாக சாலையில் உள்ள உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது. இன்று அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிவரை யாக சாலை பூஜை நடந்தது. பிறகு ஆகம விதிகளின்படி காலை 10.15 மணியளவில் அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. தலைமை தீட்சிதர் வேணு கோபாலசாமி தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
பக்தர்கள் தரிசனம்
கும்பத்தில் இருந்து ஜீவசக்தியை மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு நைவேத்தியம், அட்சத தாரோபணம், பிரம்மாகோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூலவர் ஏழுமலையானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்த அதே நேரத்தில், வரதராஜ பெருமாள், வகுளமாதேவி, பாஷ்யகாருலவாரு, யோக நரசிம்மர், விஷ்வசேனர் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தரிசனம் ரத்து
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப் பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11ஆம்தேதி முதல் சிறப்பு தரிசனம், நடைப்பாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் உள்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இலவச தரிசனத்தில் மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால் கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.
இன்று முதல் பக்தர்கள் அனுமதி
இன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்ப சாமி மட்டும் தனியாக கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இன்று இரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து சேவைகளும் தொடங்கும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த மகா கும்பாபிஷேகம் 2030ஆம் ஆண்டு நடக்கிறது.