திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம் - தெய்வானையுடன் வலம் வந்த முருகன் - அரோகரா முழக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கிரிவல வீதியில் வலம் வந்த தேரினை பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை: திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு கிரிவல வீதியில் மகா தேரோட்டம் நடைபெற்றது. தேரில் கையில் தராசு ஏந்தி தெய்வானையுடன் வலம் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதற்படைவீடாகும். தெய்வீக புலவர் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுபடை மூலம் திருப்பரங்குன்றம் முதற்படையாக போற்றப்படுகிறது. லிங்க வடிவில் குன்றம் அமைந்துள்ளது. குகை வடிவ கோவில் என்பதால் சிறப்பு வாய்ந்தது.
திருப்பரங்குன்றம் கோவிலில் மட்டுமே தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக்கோலத்தில் அருள்புரிகிறார். ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்றாலும் இந்த கோவிலுக்கு உகந்த திருவிழா பங்குனி பெருவிழா 15 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தெய்வானை திருக்கல்யாணம்
பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. திருக்கல்யாண ஊர்வலமும் அதன் பின்பு ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு வெண் பட்டுடுத்தி முருகப்பெருமானும், பச்சைப்பட்டுடுத்தி தெய்வானையும் எழுந்தருளினர்.
அம்மை அப்பன் ஆசி
சுந்தரேஸ்வர், மீனாட்சியம்மனும் வருகை புரிந்து அருளாசி வழங்க கல்யாணத்துக்கான சீர்வரிசை பழமுதிர்ச்சோலையிலிருந்து கொண்டு வரப்பட்டது. திருக்கல்யாணம் நடந்தது. இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளினர். 14வது நாளான இன்று காலை மகா தேரோட்டம் நடைபெற்றது.
கிரிவல பாதையில் தேர்
3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிரிவல பாதையில் மகா தேரானது தென்றலாய் ஆடி, அசைந்து வந்ததை கண் குளிர தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குச் சுற்றி வந்தது தேர்.
நியாயவான் முருகன்
முருகப்பெருமானின் கையில் வேல் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பழனியில் தண்டாயுதபாணி கையில் மிகப்பெரிய கம்பு இருக்கிறது. திருப்பரங்குன்றம் கோவில் தேரில் உள்ள முருகப்பெருமானின் கைகளில் தராசு உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பாகுபாடில்லாமல் கடவுள் நியாயம் வழங்குவார் தவறு செய்பவர்களை தண்டிப்பார் என்கின்றனர் பக்தர்கள். முருகன் கையில் உள்ள தராசு நீதியை நேர்மையை நிலை நாட்டும் விதமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.