மலேசியாவில் தைப்பூசம் கோலாகலம் - கொரோனாவைரஸ் அச்சத்தை மீறி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
தமிழ் கடவுள் முருகனுக்கு மலேசியாவில் தைப்பூச திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் சுமந்து வந்தும் முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவைஸ் பற்றிய அச
கோலாலம்பூர்: தமிழ்கடவுளாம் முருகப்பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழக மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதேபோல மலேசியாவில் தமிழக மக்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை முருகன் ஆலயங்களில் காவடிகள் சுமந்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை வசித்து வருகின்றனர். கொரோனாவைரஸ் பற்றிய அச்சத்தையும் மீறி மக்கள் கோலாகலமாக தைப்பூச திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்களில் பக்தர்கள், பார்வையாளர்கள், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் என 15 லட்சம் லட்சம் பேர் பத்துமலையில் கூடுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டு வழக்கமான நடவடிக்கைகளோடு, கூடுதல் சுகாதார முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வைரஸ் தொற்று ஏற்படுமோ என அச்சம் கொள்ளாமல் பக்திப் பரவசத்துடன் தைப்பூச விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
முருகன் கோவில்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். பத்துமலைக் குகை முருகன் கோவிலில் இந்துக்கள் தவிர சீனர்களும், தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன். இந்துக்களைப் போல் அலகு குத்துதல். காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர். இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தைப்பூச தேரோட்டம் காண பழனியில் குவியும் பக்தர்கள் - நகரமெங்கும் அரோகரா முழக்கம்
வெள்ளிரத ஊர்வலம்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து, முருகக் கடவுள் மற்றும் வள்ளி, தெய்வானையை தாங்கிய பிரமாண்டமான ரத ஊர்வலம் துவங்கியது. வழியெங்கிலும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். இந்த ரத ஊர்வலமானது கோலாலம்பூரின் சில பகுதிகளின் வழியே பத்துமலை முருகன் கோயிலை சென்றடைந்தது.
அலகு குத்தி வந்த பக்தர்கள்
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துகுகை முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடம்பில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதே போல் ஆண்கள், பெண்கள் என பலரும் பால்குடம் ஏந்தி, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்தும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிப்பட்டு வருகின்றனர்.
தண்ணீர் மலை தண்டாயுதபாணி
பினாங்கு, தண்ணீர் மலை, பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. இன்றைய தினம் பக்தர்கள் காவடி சுமந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தமிழ் மக்கள் மட்டுமில்லாது மலேசியா மக்கள் கொரேனா வைரஸ் பாதிப்பையும் மீறி பக்தியுடன் காவடிகளை சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் தைப்பூசம்
இதேபோல சிங்கப்பூரில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா களைகட்டியுள்ளது. பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர். இலங்கையில் நல்லூர் கந்தசாமி கோவில், கண்டி கதிர்காமம் முருகன் ஆலயங்களில் தைப்பூச திருவிபா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மொரிசீயஸ், ஆஸ்திரேலியாவிலும் தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.