மாங்கனி திருவிழா கோலாகலம்: காரைக்காலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் மாங்கனியை வீசி இறைவனை வழிபட்டனர்.
Recommended Video
காரைக்கால்: பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை இறைப்போருக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
காரைக்கால் பாரதியார் வீதியில் தனிக்கோயிலில் காரைக்கால் அம்மையார் அருள்பாலிக்கிறார். ஒப்பற்ற சிவனடியாராக வாழ்ந்த இந்த அம்மையாரின் வாழ்க்கையையும் தொண்டுகளையும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா திங்கட்கிழமை மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீபரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கல்யாணம் கோலாகலம்
செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீபரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை ஈசன் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி உலா நடைபெற்றது. இரவு புனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச் சிவிகையில் வீதியுலா வந்தனர்.
மாங்கனி வீசி வழிபாடு
புதன்கிழமையான இன்று அதிகாலை 3 மணி தொடங்கி 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஈஸ்வரன், காரைக்கால் அம்மையிடம் பிட்சை வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா சென்றார். அப்போது நகரெங்கும் கூடியிருக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெற்றனர்.
குழந்தை வரம் கிடைக்கும்
இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. மாலை 6 மணிக்கு ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாங்கனி விழாவின் கடைசி நாளான நான்காம் நாள் 28ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையார் எலும்புருவுடன் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பேயுருவம் பெற்ற அன்னை
63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர் காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
பக்தர்களுக்கு மாங்கனி பிரசாதம்
குலசேகரபட்டினத்தில் பேயுருவம் பெற்று கயிலாயத்திற்கு தலையால் நடந்து சென்று ஈசனால் அம்மையே என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியவர் காரைக்கால் அம்மையார். அவரது வரலாற்றினை எடுத்துக்கூறும் வகையில் குலசையில் மாங்கனி திருவிழா 28ஆம் நடைபெறுகிறது. அம்மைக்கு ஆயிரக்கணக்கான மாங்கனிகளை படையலிட்டு வணங்கி அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர்.