ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா - சர்வமதத்தினர் பிரார்த்தனை
ராமநாதபுரம்: ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவின் 845ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று நடந்தது. இதில் ஜாதி மதபேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தென் மாநிலங்களான கேரள, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான மக்கள் ஏர்வாடி தர்ஹாவுக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கியிருந்து பிரார்த்தனை செய்து வந்தால் அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான மனநல காப்பகங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதமானது யானை, குதிரைகள் மற்றும் மேலதாளத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு ஊரின் முக்கிய வீதி வழியாக காலை 5.30 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது.
ஊர்வலத்தில் கரைத்த சந்தனத்தை வெள்ளி குடங்களில் எடுத்து வந்து காலை 5.30 மணியளவில் மகானின் மக்பிராவில் பூசினர். இத்திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமல்லாது கேரள மாநிலத்திலிருந்து வந்திருந்த அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். விழாவுக்காக வந்திருந்த யாத்ரீகர்களின் நலனுக்காக சிறப்பான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தர்கள் பொது மகா சபையினர் செய்திருந்தனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.