திருவையாறில் 172வது தியாகராஜர் ஆராதனை விழா: 25ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை
தஞ்சாவூர் : காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் 'ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை' சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 172வது ஆண்டு ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி ஜனவரி 25ஆம் தேதி நடைபெறுகிறது.
கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழா நேற்று மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. இதையடுத்து மாலை 6 மணிக்கு அறங்காவலர் குழு தலைவரும் த.மா.கா தலைவருமான வாசன் தலைமையில், டி.வி.கோபாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார்.
இதைதொடர்ந்து இன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணன் பாட்டு, சிக்கல் குருசரண் பாட்டு, சந்திப் நாராயணன் பாட்டு, பாபநாசம் அசோக் ரமணி பாட்டு, ராஜேஷ் வைத்யா வீணை உள்பட 13 இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரண்டாவது நாளான இன்று 62 இன்னிசை நிகழ்ச்சிகளும், 23ஆம் தேதி 60 இன்னிசை நிகழ்ச்சிகளும், நான்காம் நாளான 24ஆம் தேதி 62 இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 25ஆம் தேதி காலை 8 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து தியாகராஜரின் சிலை ஊர்வலமாக, பஜனையுடன் விழா பந்தலுக்கு எடுத்துவரப்படும்.
காலை 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி தியாகராஜர் பாடிய நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம் உள்ளிட்ட 5 ராகங்களில் பாடப்பட்ட பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்துவார்கள். நாகஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், கடம் என்று கர்நாடக இசையின் பக்க வாத்தியக் கலைஞர்களின் இசைப்புடன் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை கர்நாடக இசை கலைஞர்கள் பாடி இசை அஞ்சலி செலுத்துவார்கள்.
அதை தொடர்ந்து அன்று இரவு 11 மணிக்கு ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தியாகராஜர் ஆதாரதனையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.